ஸ்ரீரங்கம்: மகள் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை கலெக்டரிடம் புகார்

ஸ்ரீரங்கம்: மகள் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை கலெக்டரிடம் புகார்
X

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மர்மமாக இறந்த ரம்யா.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வணிகவரித் துறை அலுவலக ஊழியர் அமிர்தலிங்கம். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களின் இரண்டாவது மகள் ரம்யா ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிமுத்து மகன் குமரகுருபரன் என்பவரை கடந்த 2010-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நாங்கள் மகளுக்கு வரதட்சணையாக 40 பவுன் தங்க நகைகளை கொடுத்தோம். தற்போது எங்களின் மகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குமரகுரு சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே என் மகளின் மாமனார் மாரிமுத்து அடிக்கடி ரம்யாவிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15-9-2021 அன்று எனது மகள் அவரது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக மாமனார் மாரிமுத்து தெரிவித்தார். எங்களது மகள் ரம்யா தூக்கில் தொங்கும் போது அதனை குமரகுருபரன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக எங்களது பேரன் எங்களிடம் தெரிவித்தார். மேலும் சுயநினைவு இல்லாத தருணத்தை பயன்படுத்தி பல வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

ஆகவே எங்களது மகள் சாவில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தோம். ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொடுத்த புகாரை அவர் வாங்க மறுத்து விட்டார். மேலும் எங்களது மகளின் செல்போன் எங்கு உள்ளது என்று கேட்ட போதும் போலீஸ் தரப்பில் எந்த தகவலும் கொடுக்கப்பட வில்லை. ஆகவே எங்கள் மகளின் சாவுக்கு காரணமான அவரது கணவர் குமரகுருபரன், மாமனார் மாரிமுத்து மற்றும் உறவினர் நாகராஜ் ஆகியோரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரகுருபரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மகள் ஏற்கனவே கூறியுள்ளார். மகள் சாவில் எங்களுக்கு பலத்த சந்தேகம் உள்ளது. மேலும் குமரகுருபரன் தரப்பினர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எங்கள் பேரக் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக கருதுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story