திருச்சியில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி

திருச்சியில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி.

சீட்டு ஒதுக்கீடு விவகாரத்தில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக திருச்சியில் காங்கிரசார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி பகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நேற்று வார்டு பிரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த குழுவில் தேர்தல் பணிக்குழு இல்லாமல் மாவட்ட தலைவர்கள் தன்னிச்சையாக கலந்துகொண்டு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், முன்னாள் மேயர் சுஜாதா, மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், பஞ்சாயத் ராஜ் சங்கதன் மாநில உறுப்பினர் சேர்க்கை தலைவர் அண்ணாதுரை, திலகர், மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்., சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் மன்சூர் அலி, முன்னாள் கவுன்சிலர் ஹேமா, காளீஸ்வரன் மற்றும் சேவாதளம் மாநில பொதுச்செயலளர் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.

பின்னர் திருச்சி வேலுச்சாமி, ஜெரோம் ஆரோக்கியராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் மாநில தலைமை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குழு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் மாவட்ட தலைவர்கள் தன்னிச்சையாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட குழுவினரின் ஒப்பந்தம் இல்லாமல் கையெழுத்திட முடியாது என தெளிவாக கூறியுள்ளார்.

ஆகவே திருச்சி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகள் தொடர்பாக வரும் தகவலை கட்சியினர் யாரும் நம்ப வேண்டாம். குழு தலைவர் திருநாவுக்கரசு நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த வருவதாக சொல்லி இருக்கிறார். நீண்ட பாரம்பரியம் மிக்க திருச்சி மாநகராட்சி, நகராட்சியாக இருந்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் தலைவர்களாக இருந்து வந்தனர்.

மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட 4 தேர்தல்களில் மூன்று முறை காங்கிரஸ் மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. ஒரு முறை அதிமுக இருந்தது. ஆனால் இந்த பாரம்பரியம் மிக்க கட்சிக்கு மிகவும் குறைந்த பட்ச இடம் என்பதை ஏற்க முடியாது என்று கூறினார்கள்.

Tags

Next Story