உப்பிலியபுரம் அருகே மின்மோட்டாரை சரி செய்ய கிணற்றில் இறங்கிய விவசாயி பலி

உப்பிலியபுரம் அருகே மின்மோட்டாரை சரி செய்ய கிணற்றில் இறங்கிய விவசாயி பலி
X
சந்திரசேகர்.
உப்பிலியபுரம் அருகே மின்மோட்டாரை சரி செய்ய கிணற்றில் இறங்கிய விவசாயி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே செட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 37). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது தோட்டத்தில் கிணற்று தண்ணீருக்குள் இருந்த மின்மோட்டாரை கட்டியிருந்த கயிற்றை சரி செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கினார். இதற்காக கிணற்று தண்ணீரில் மூழ்கி சரி செய்தார். இவ்வாறு சரி செய்தபோது, 2 முறை மேலே வந்தார். 3-வது முறையாக சரி செய்ய முயன்றபோது, மேலே வரவில்லை. சந்திரசேகர் கிணற்று தண்ணீருக்குள் மூழ்கினார்.

இதனிடையே கிணற்றின் கரையில் உதவிக்கு நின்றவர்கள் சந்திரசேகர் வெளியே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நீண்ட நேரம் ஆகியதால் தேடும்பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் நேற்று காலையில் கிணற்று தண்ணீர் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் சந்திரசேகர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிணற்றில் மூழ்கி இறந்த சந்திரசேகருக்கு மேகலா (34) என்ற மனைவியும், தர்ஷினி (4) என்ற மகளும் உள்ளனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?