ஸ்ரீரங்கம் வசந்த உற்சவத்தில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

ஸ்ரீரங்கம் வசந்த விழாவில் தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார் நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வசந்த விழாவில் தங்க குதிரை வாகனத்தில் உற்சவர் நம்பெருமாள் வீதி உலா வந்தார்.
பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் கோடை திருநாள் எனப்படும் நம்பெருமாள் வசந்த உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது.
வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்வார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளுவார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்தஉற்சவத்தின் 7-ம் நாளான 2-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்ககுதிரை வாகனத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டார்.
தொடர்ந்து நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்தார். தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த நம்பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரங்கா ரங்கா என கோஷமிட்டு வழிபாடு செய்தனர். இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு வசந்த மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார்.
நம்பெருமாள் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu