ஸ்ரீரங்கம் கோயிலில் கொலை மிரட்டல் விடுத்ததாக பரத நாட்டிய கலைஞர் புகார்

ஸ்ரீரங்கம் கோயிலில் கொலை மிரட்டல் விடுத்ததாக பரத நாட்டிய கலைஞர் புகார்
X
சென்னையை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பாநகரை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். பரதநாட்டிய கலைஞரான இவர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஆன்-லைன் மூலம் ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

என் பெயர் ஜாகிர் உசேன். கடந்த 30 ஆண்டுகளாக ஒரு பரத நாட்டிய கலைஞனாகவும் வைணவ சொற்பொழிவாளராகவும் இருந்து வருகிறேன். மத்திய அரசின் "சமூக நல்லிணக்க விருது" தமிழகஅரசின் 'கலைமாமணி' விருது உள்பட பல விருதுகளால் கவுரவப்படுத்தப்பட்டேன். தற்போதைய முதல்-அமைச்சர் அவர்களால் `நாட்டியச் செல்வன்' விருதினையும் பெற்றுள்ளேன்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம் அவர்களால் பல பட்டங்களை பெற்றுள்ளேன். பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும் வாழ்வால் ஒரு வைணவனாகவே வாழ்ந்து வரும் நான், பல வைணவ திருத்தலங்களின் திருப்பணிகளை செய்துள்ளேன்.

நேற்று முன்தினம் நண்பகல் அமைதியான முறையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க கோவிலுக்குள் சென்ற எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அவமதிக்கப்பட்டு, என் மத, சாதி அடையாளத்தை கொச்சையாக தகாத சொற்களால் பேசி கோவிலுக்குள் நுழையவிடாமல் தள்ளப்பட்டு வெளியேற்றப்பட்டேன்.

இதுவரை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் என் பிறப்பின் அடிப்படையில் எனக்கு அனுமதி மறுத்ததில்லை. ஆனால் அன்று அவமானத்தால் கூனிக்குறுகி கோவிலிருந்து வெளியேறினேன். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் ரத்த அழுத்தம் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெற்று திரும்பினேன்.

கோவிலில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர், தான் பிறந்த சமூகத்தின் அடிப்படையில் அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக என்னை வழி மறித்து அவமதித்து தகாத சொற்களால் பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கும், எனக்கெதிராக ஒரு தீண்டாமையை நிகழ்த்தி இந்திய இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல் பட்டதற்கும் அவரை கைது செய்து விசாரித்து உரிய நீதி வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
ai in future agriculture