திருச்சி அருகே ஜல்லிக்கட்டை தடுக்க சென்ற சப்- இன்ஸ்பெக்டர் காயம்

திருச்சி அருகே ஜல்லிக்கட்டை தடுக்க சென்ற சப்- இன்ஸ்பெக்டர் காயம்
X

திருச்சி அருகே அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருச்சி அருகே அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டை தடுக்க சென்ற சப்- இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டு காயம் அடைந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சியில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம நிர்வாகிகள் கல்லக்குடி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை கீழரசூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கீழரசூர் கிராமத்திற்கு நேரில் சென்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கூறி அங்கு இருந்த பலகைகளை அப்புறப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் மீண்டும் மாடுகளை அவிழ்த்து விடுவதாக தகவலறிந்த சப் - இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கலைந்து போகும்படி கூறியுள்ளனர்.

அப்போது ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டவர்கள் ஆத்திரத்தில் கல்வீசி தாக்கியதில் சப் - இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயத்துடன் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் வந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?