திருச்சி அருகே விடுதியில் தங்கி இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம சாவு
திருச்சி அருகே ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் தங்கும் விடுதியில் இறந்து கிடந்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கொடுமுடி எமகண்டனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார்(வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், குணசீலம் பகுதியில் இடம் பார்ப்பதற்காக வந்த செந்தில்குமார் குணசீலத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். செந்தில்குமாரின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதியின் உரிமையாளர் வாத்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் செந்தில்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரணமாக செந்தில்குமாரை யாரேனும் கொலை செய்தார்களா?, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.