திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க முயன்ற வழக்கில் 10 பேரிடம் விசாரணை

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டு லாரி டயர்.
திருச்சி அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க முயன்ற வழக்கு தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி-சென்னை ரெயில்வே வழித்தடத்தில் லால்குடி அருகே கடந்த 1-ந்தேதி இரவு தண்டவாளத்தில் குறுக்கே இரண்டு லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நள்ளிரவு இந்த வழியாக சென்னை நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதன் மீது மோதியதில் என்ஜின் அடிப்பகுதியில் இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டதால் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டு சென்றது. இதுகுறித்து விருத்தாச்சலம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்டவாளத்தின் குறுக்கே டயர்களை வைத்ததில் சதிச்செயல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக சம்பவம் நடந்த இடத்தில் ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தற்போது அந்தப் பகுதியில் யார் யாருடைய செல்போன் நம்பர்களின் சிக்னல் காண்பித்ததோ அவர்களையும், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் மேக்ஸ் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu