சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு - உங்கள் அதிகாரம் எங்களை கட்டுப்படுத்தாது :தீட்ஷிதர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு - உங்கள் அதிகாரம் எங்களை கட்டுப்படுத்தாது :தீட்ஷிதர்கள்
X

சிதம்பரம் நடராஜர் கோயில் (மாதிரி படம்)

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வுக்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அரசின் அதிகாரம் எங்களை கட்டுப்படுத்தாது என்று தீட்ஷிதர்கள் கூறினர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது கோயில் நிர்வாகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் பிறகுவந்த அ.தி.மு.க ஆட்சியின் போது 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கோயில் நிர்வாகம் மீண்டும் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அதனடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் கோயிலை நிர்வாகம் செய்து வருகின்றனர். மீண்டும் தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பக்தர்கள் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்வதற்கு சட்ட நடவடிக்கையை எடுத்தது. இந்த நிலையில்தான், இன்றும் நாளையும் கோயிலில் ஆய்வு நடத்தப்படும் என்றும், 2014ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை கோயிலின் கணக்குகளுக்கான ஆவணங்களைத் தர வேண்டும் என்றும் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை எங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறினர். இந்நிலையில்தான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். அவரை வரவேற்ற தீட்சிதர்கள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அவர்களுடன் சென்ற அமைச்சர் கனகசபை மீது ஏறி நின்று நடராஜரைத் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.

அதையடுத்து ஆயிரங்கால் மண்டபத்தில் கீழே தரையில் அமர்ந்து தீட்சிதர்களுடன் அமைச்சர் பேசினார். கோயிலின் நிர்வாகம், பூஜை முறைகள் குறித்து அமைச்சருக்கு தீட்சிதர்கள் விளக்கமளித்தனர். அதேபோல கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்வதற்குத் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் விளக்கமளித்தனர். அவர்களிடம், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்தும், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் குறித்தும் விளக்கிய அமைச்சர், எதையுமே தடுப்பதால்தான் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள். கோயிலுக்கு ஆய்வுக்கு வரும் குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கூறினார்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை குழு இன்று காலை கோயிலுக்கு வந்தது. இந்த குழுவில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நிலங்களுக்கான கடலூர் துணை ஆணையரும், விசாரணைக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஜோதி, பழனி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், வேலூர் மாவட்ட இணை ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த குழு ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களைக் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர்.

சட்டரீதியாக வந்தால் உங்களுக்குக் கணக்கு வழக்குகள் காண்பிக்க நாங்கள் தயார். ஆனால், எங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது. எங்களிடம் கணக்குகள் முறையாக இருக்கின்றன. உங்களிடம் நாங்கள் கணக்கு காண்பிக்க முடியாது. நீங்கள் நீதிமன்றம் மூலம் வாருங்கள் என தீட்ஷிதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

பின்னர் தீட்சிதர்கள் சார்பில் பேசிய வழக்கறிஞர் சந்திரசேகர், கணக்கு வழக்குகளை உங்களுக்குக் காட்ட வேண்டும் என்று எந்த அரசாணையும் எங்களுக்கு வரவில்லை. இதற்கான பதிலை நாங்கள் முன்பே அளித்துவிட்டோம். நேற்று கோயிலுக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சரிடமும் நாங்கள் கூறி விட்டோம். நீங்கள் திரும்பிப்போகலாம் என்று கூறினார்.

ஆனாலும் இந்து அறநிலையத்துறையினர் கோயிலில் இருந்து வெளியேறாமல் அங்கு முகாமிட்டிருப்பதால் கோயில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, இது சம்பந்தமாக ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் ஆய்வு முடியவில்லை என்றனர்.

இந்த நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், சிதம்பரம் நடராஜர் கோயில் எல்லோருக்குமான பொதுக்கோயில் என்று உயர் நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அப்படியிருக்கும் போது, அந்தக் கோயிலில் புகார்களை விசாரிக்க அறநிலையத்துறை ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனு நீதி, மனு தர்மம். என்றார்.

Tags

Next Story
ai as the future