மகளிர் தினத்தன்று தேனி மகளிர் ஸ்டேஷனில் குவிந்த புகார்கள்

மகளிர் தினத்தன்று தேனி மகளிர்   ஸ்டேஷனில் குவிந்த புகார்கள்
X

தேனி மகளிர் ஸ்டேஷனில் மகளிர் தினமான இன்று புகார் கொடுக்க வந்த கூட்டத்தின் ஒரு பகுதி.

மகளிர் தினமான இன்று தேனி மகளிர் ஸ்டேஷனில் வழக்கத்திற்கு மாறாக குடும்ப வன்முறை குறித்த புகார்கள் அதிகளவில் வந்தன.

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. 'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்' என்ற கோஷம் எல்லா திசைகளிலும் ஒலிக்கிறது. சமூக வலைதளங்களில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன.

ஆனால் சமூகத்தின் உண்மை நிலை, 'ஏன் பிறந்தாய் மகளே, ஏன் பிறந்தாயோ' என்ற அளவில் தான் உள்ளது. இதற்கு தேனி மகளிர் ஸ்டேஷனில் குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க இன்று கூடிய கூட்டமே சான்று.

வழக்கமாக எப்போதுமே தேனி மகளிர் ஸ்டேஷன் பிஸியாகவே இருக்கும். இன்று வழகத்தை விட அதிககூட்டம் கூடியதால் இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை அத்தனை பேருக்கும் தலை கிறுகிறுத்து விட்டது. அவ்வளவு கூட்டம்.

பெண்களுக்கு எதிராக அவ்வளவு கொடுமைகள். புகார் கொடுக்க கண்ணீருடன் குவிந்த பெண்களின் முக வாட்டமே அவர்கள் எந்த அளவு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்பதை எடுத்துக் காட்டியது. வழக்கம் போல் இன்றும் காதல் ஜோடிகள் சிலர் (ஆமாம் காதல் ஜோடிகள் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து விட்டு, மகளிர் ஸ்டேஷனில் தஞ்சமடைவார்கள்) வந்திருந்தனர்.

ஒவ்வொருவராக போலீசார் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். என்ன தான் பெண்கள் சுதந்திரம் குறித்து நாம் பேசினாலும், மகளிர் ஸ்டேஷனுக்கு புகார் வராத நாளே உண்மையான மகளிர் தினம் கொண்டாட தகுதியான நாள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story