தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த  அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

மதுரையை நோக்கிய பாய்ந்து ஓடும் வைகை ஆறு. இடம்: ஆண்டிபட்டி வைகை அணை அருகே.

பெரியாறு, வைகை அணை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் மழை முழுமையாக விடை பெற்று ஒரு மாதத்தை கடந்து விட்டது. கடந்த முறை பெய்த மழையால் இதுவரை கிடைத்த நீர் வரத்து குறைந்து விட்டது. பெரியாறு அணைக்கு விநாடிக்கு 155 கனஅடி மட்டுமே நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1500 கனஅடி நீர் வெளியேறிக்கொண்டுள்ளது. இப்போது நீர் மட்டம் 131.35 அடியாக உள்ளது.

அதேபோல் வைகை அணை நீர் மட்டம் 69.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1056 கனஅடி நீர் வந்தாலும், அணையில் இருந்து 2069 கனஅடி நீர் வெளியேறிக்கொண்டுள்ளது. இனிமேல் அடுத்து மழை ஜூலை மாதம் தான் கிடைக்கும். இன்னும் ஐந்து மாதங்கள் மழைக்கான வாய்ப்பு மிக, மிக குறைவு. தற்போது வானிலை முழுமையாக மாறி விட்டதால், மழை வருமா? வந்தாலும் எவ்வளவு பெய்யும் என முன்பு போல கணிக்கவே முடியாது. மக்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தேவை. எனவே பொதுப்பணித்துறையினர் அணைகளில் இருந்து நீர் திறப்பை குறைத்து, நீரை கவனமாக சேமித்து பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகளின் நீர் மேலாண்மை குறைபாடு எங்களுக்கு பெரும் ஐயத்தை கிளப்பி உள்ளது.

மழை கிடைக்கும் நேரத்தில் அணையினை மூடி வைப்பது. மழை இல்லாத நேரத்தில் அதிகளவு நீரை திறப்பது என குழப்பம் பொதுப்பணித்துறையில் நிலவுகிறது. இது குறித்து நாங்கள் பலமுறை முறையீடு செய்தும், போராட்டம் நடத்தியும் கூட பலன் இல்லை. எனவே இருக்கும் நீரை வீணாக திறந்து விட்டு மக்களை வாடவிடாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story