/* */

தேனி பைபாஸ் ரோடு: ஒரு வாரத்தில் திறப்பு

திண்டுக்கல்- தேனி- குமுளி பைபாஸ் ரோடு பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில், அடுத்த வாரம் தேனி பைபாஸ் போக்குவரத்து தொடங்க உள்ளது.

HIGHLIGHTS

தேனி பைபாஸ் ரோடு: ஒரு வாரத்தில் திறப்பு
X

தேனி நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. ஒரு வாரத்தில்இந்த பாதை போக்குவரத்திற்கு திறக்கப்பட உள்ளது.

திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோடு 133 கி.மீ., நீளம் கொண்டது. இந்த ரோடு அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டாலும், தற்போது இருவழிப்பாதை பணிகள் மட்டும் தான் நிறைவடைந்துள்ளன. இந்த ரோட்டில் வாகனப் போக்குவரத்து தொடங்கி வீரபாண்டி அருகே டோல்கேட்டில் வசூல் பணிகளும் தொடங்கி விட்டது. ஆனாலும் தேனி பைபாஸ் ரோட்டில் பணிகள் நிறைவடையாமல் இருந்தது.

அதேபோல் பெரியகுளம் அருகே எண்டப்புளி புதுப்பட்டி அருகிலும், திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியிலும் பணிகள் நிறைவடையாமல் இருந்தன. இப்போது பெரியகுளம் எண்டப்புளி அருகே பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. சபரிமலை சீசன் தொடங்கி பக்தர்களின் வருகை தொடங்கிய நிலையில், தேனி பைபாஸ் ரோட்டில் மட்டும் பணிகள் நிறைவடையாமல் இருந்தன. பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

இதனால் பைபாஸ் ரோடு பணிகளை முடித்து போக்குவரத்தை விரைவில் தொடங்க வேண்டும் என காவல்துறையும் கோரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து பைபாஸ் ரோடு பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்து விட்டது. நேற்று முதல் டூ வீலர்கள் மட்டும் பைபாஸ் ரோட்டின் வழியாக அனுமதிக்கப்பட்டது.

வரும் திங்கள் கிழமை முதல் நான்கு சக்கர வாகனங்கள், பக்தர்களின் வேன்கள் உள்ளிட்ட அத்தனை வாகனங்களும் அனுமதிக்கப்பட உள்ளன. பூதிப்புரம் ரோட்டின் மீது அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் கான்கிரீட் பணிகள் நிறைவடைந்து செட் ஆவதற்காக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 10 நாட்களில் கனரக வாகனங்களும் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்படியும் சபரிமலை சீசன் முழுமையாக தொடங்க இன்னும் 10 நாள் வரை ஆகும். அதற்குள் பைபாஸ் ரோட்டில் முழு அளவிலான வாகன போக்குவரத்து தொடங்கி விடும். எனவே தேனி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் திண்டுக்கல்லில் இருந்தே குமுளி வரை நான்கு வழிப்பாதையில் முழுமையாக பயணிக்க முடியும். வக்கம்பட்டியில் மட்டும் சிறிய பணிகள் மீதமுள்ளது. குமுளியில் இருந்து வீரபாண்டி வரை பைபாஸ் ரோட்டில் பயணிக்க டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திண்டுக்கல் வக்கம்பட்டியில் பணிகள் நிறைவடைந்த பின்னர், வத்தலக்குண்டு அருகே உள்ள டோல்கேட்டிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் பூதிப்புரம் மேம்பாலத்தில் சர்வீஸ் ரோடு வசதி வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை நிறைவேற்ற முடியாது. காரணம் இந்த இடத்தில் ரயில்வே மேம்பாலம் செல்கிறது. இதனால் சர்வீஸ் ரோட்டிற்கும் சேர்த்து பாலம் கட்ட வேண்டும். ரயில்வே மேம்பாலம் 13 மீட்டர் உயரத்தில் அமைகிறது. இந்த இடத்தில் பாலம் இல்லாமல் சர்வீஸ் ரோடு அமைப்பது சாத்தியமில்லை. இவ்வளவு உயரத்திற்கு வாகனங்களை ஏற்றி இறக்குவதும் ஆபத்து என்பதால் இந்த திட்டத்தை நிராகரித்து விட்டோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 22 Nov 2022 4:39 AM GMT

Related News