தேனி மாவட்டம் - அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு பயிற்சி முகாம்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இம் முகாமில் செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவமனைகளில் சமீபத்தில் தீ விபத்துகள் நடைபெற்றதை தொடர்ந்து, மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்க தீயணைப்பு துறை அறிவுறுத்தியது. இதன் பேரில் போடி அரசு மருத்துவமனையில், தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தேனி தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் குமரேசன் தலைமையிலும், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் ரவீந்திரநாத் முன்னிலையிலும் முகாம் நடைபெற்றது. போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீயின் வகைகள், தீயணைப்பு சாதனங்களின் வகைகள், தீயை அணைக்கும் முறைகள் குறித்து விளக்கினர்.
மேலும் தீயணைப்பான்களை கையாளும் முறைகள் குறித்தும் மருத்துவமனை போன்ற மக்கள் கூடும் கட்டடங்களில் தீயணைப்பின்போது செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். தீத்தடுப்பு பயிற்சி முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியல்கள், உதவியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu