ஆள்பெயர் ஊர் பெயர் ஒன்றாக இருந்ததால் ஆபத்தை எதிர்கொண்ட கட்டிடத்தொழிலாளி

ஆள்பெயர் ஊர் பெயர்  ஒன்றாக இருந்ததால்  ஆபத்தை எதிர்கொண்ட கட்டிடத்தொழிலாளி
பெண் ஒருவர் காணாமல் போன வழக்கில் பெயரில் தவறான புரிதலால் ஆபத்தை எதிர்கொண்ட கட்டிடத்தொழிலாளி யை போலீஸார் காப்பாற்றினர்

தேனியில் வெள்ளிமலை என்ற பெயருடை கொத்தனார் ஒருவர் பெண்காணாமல் போன சம்பவத்தில் பெண்ணின் உறவினர்களின் தவறான புரிதல் காரணமாக உயிருக்கு ஆபத்தை எதிர் கொண்ட நிலையில், உண்மையை புரிய வைத்து போலீஸார் அவரைக்காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனியை சேர்ந்த 52 வயதான பெண் . இவருக்கு கணவர் மற்றும் திருமண வயதில் ஆண், பெண் வாரிசுகள் உள்ளனர். இந்நிலையில், இந்த பெண் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனார். இது தொடர்பாக அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணியிடம் புகார் அளிக்கப்பட்டது.எனவே இந்த பெண்ணை கண்டறிய தனி போலீஸ் பிரிவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். போலீஸார் மொபைல் போன் அழைப்புகளை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது கணவரும், மகனும் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என பெருங்கூட்டமே அந்த பெண்ணை பல இடங்கலில் தேடி வந்தது.

இந்நிலையில் போலீஸாருக்கு அவர்களுக்கு சில தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் அந்த பெண்ணின் இருப்பிடம் தெரியவந்தது. அந்த பெண் வெள்ளிமலை என்ற மலைக் கிராமத்தில் இருக்கிறார் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத்தகவலை, வெள்ளிமலையுடன் இருக்கிறார் என அவரை தேடிய தந்தையும், மகனும் அவரது உறவினர்களும் தவறாக புரிந்து கொண்டனர். அல்லிநகரத்தில் வெள்ளிமலை என்ற நபரை தேடியபோது அந்தப்பெயரில் கொத்தனார் ஒருவர் இருப்பது தெரியவந்தது. அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று அவரை அடையாளம் கண்டு கொண்டு விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவரது செல்போன் நம்பர், அவரது உறவினர்கள் எண்ணை வாங்கி மிரட்டல் விடுத்தனர். எதற்காக மிரட்டல் எதற்காக தேடுகின்றனர் என எதுவும் புரியாமல் கொத்தனார் குழம்பிப் போனார். கொத்தனாரின் உறவினர்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர்.

ஏதோ ஒரு பெரும் பிரச்னை தன்னை சூழ்ந்துள்ளது என முடிவு செய்த கொத்தனார் , அல்லிநகரம் இன்ஸ்பெக்டரிடம் நேரில் சென்று நடந்த விஷயங்களை தெரிவித்தார். பிரச்னையின் விபரீதத்தை உணர்ந்த இன்ஸ்பெக்டர் சிலைமணி, அவர்களுக்கு வந்த மிரட்டல் போன் நம்பர்களை வைத்து மிரட்டியது யார் என்பதை கண்டறிந்தார்.உடனடியாக அவர்களை அழைத்து, காணாமல் போன உனது மனைவி இருக்குமிடத்தைக் கண்டு பிடித்து விட்டோம். ஆனால் இந்த வெள்ளிமலைக்கும், உனது மனைவி காணாமல் போனசம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. . பெயர் குழப்பத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். இனிமேல் இந்த கொத்தனாரை மிரட்டினாலோ, போன் செய்தாலோ உங்களை குடும்பத்துடன் கைது செய்து சிறைக்கு அனுப்பி விட நேரிடும் என எச்சரித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது அந்த பெண் போலீசாரின் வளையத்திற்குள் பாதுகாப்பாக இருக்கிறார். அவரை வரும் திங்கள்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், கணவனிடம் மகளிடம் ஒப்படைப்போம். அந்த பெண்ணிடம் விசாரித்த பின்னரே அவர் வீட்டை விட்டு வெளியேறியதற்கு காரணம் தெரியவரும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தெரிவித்தார்.

Tags

Next Story