புரோக்கர்களின் பிடியில் தாலுகா அலுவலகங்கள்..!

புரோக்கர்களின் பிடியில் தாலுகா அலுவலகங்கள்..!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கோப்பு படம்)

தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் புரோக்கர்களின் பிடியில் சிக்கி உள்ளன.

முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித்தொகை பெற 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. ஆயிரம் ரூபாய் உதவித்தொகைக்கும் சிலர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் முதியோர், ஆதரவற்றோர், விதவை உதவித்தொகைகள் வழங்குவது சில ஆண்டுகளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்களில் யாராவது இறந்தால் மட்டுமே விண்ணப்பித்து காத்திருப்பவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதாவது உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையினை உயர்த்தாமல் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

ஆனால் பணம் கொடுப்பவர்களுக்கு இதில் எந்த விதி விலக்கும் இல்லை. உதவித்தொகை பெறுபவர்கள் புரோக்கர்களை பிடித்து பணம் கொடுத்தால், அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட மாதமே உதவித்தொகை கிடைத்து விடும். புரோக்கர்கள் இல்லாமல் உதவித்தொகை பெறுவது சாத்தியமில்லை என்ற அவல நிலையினை உருவாக்கி விட்டனர். தவிர தற்போது தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழும் பணம் வாங்கித்தருவதாக கூறி சிலர் அப்பாவிகளிடம் பணம் வசூலித்து வருகின்றனர்.

இதனால் உண்மையில் தகுதியுள்ள ஏழை பயனாளிகள் பலர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். புரோக்கர்கள் சிலர் செய்யும் இந்த இழி செயலால், இதற்கு துணை போகும் அதிகாரிகளால் அரசு கொண்டு வந்துள்ள நல்ல திட்டங்கள் கூட விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. நல்ல திட்டங்கள் கொண்டு வந்தும் அரசுக்கு தேவையில்லாமல் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு புரோக்கர்களின் ஆதிக்கத்தை குறைத்து தகுதி உள்ள பயனாளிகளுக்கு பணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story