பாம்புகள் வீட்டிற்குள் வரலாம்..கவனமாக இருங்கள்..!
தேனி மாவட்டத்தில் மட்டும் 1100 சதுர கி.மீ., மலைகள் உள்ளன. திண்டுக்கல், மதுரை மாவட்ட வனப்பகுதியை சேர்ந்த 300 சதுர கி.மீ., மலைகளும் தேனி மாவட்ட எல்லைக்குள் உள்ளன. இந்த மலைப்பகுதிகள் முழுக்க தேனி மாவட்டத்தை நான்கு புறமும் சூழ்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் எந்த கிராமத்தில், நகரத்தில் இருந்தும் ஓரிரு கி.மீ., தொலைவிலேயே வனத்திற்குள் சென்று விடலாம். அதேபோல் வனத்தை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் உள்ளன. தேனி மாவட்டம், முழுவதும் அடிக்கடி பாம்பு வீடுகளுக்குள் புகுவது பெரும் பிரச்னையாகவே இருந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் அத்தனை தீயணைப்பு நிலையங்களும் பாம்புகளை பிடித்து மீண்டும் வனத்திற்குள் விடும் வேலைகளை தான் அதிகம் செய்துள்ளனர். இந்நிலையில் பாம்புகள் குறித்து அதிகளவு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இது குறித்து தேனி மாவட்ட தீயணைப்பு படையினர் கூறியதாவது: பாம்புகள் தற்போது வெயில் காலம் என்பதால் குளிர்ச்சியான இடங்களை தேடி வரும். எனவே
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும். உயரமான இடங்களை கூட கடந்து எளிதில் உள்ளே வந்து விடும்.
2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.
6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.
7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.
8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
9. பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டது உங்களுக்கு பயமாக இருந்தால் அருகிலுள்ள வனத்துறையினரை கூப்பிடுங்கள்
உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.
பாம்புகளை பார்த்தால் உடனே வீட்டை விட்டு வெளியே வந்து விட்டு தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தாருங்கள். உங்களால் பாம்புகளை இனம் கண்டறிய முடியாது. கடும் விஷப்பாம்புகளை கூட, கடும் சீற்றம் கொண்ட பாம்புகளை கூட நீங்கள் சாதாரணமாக நினைத்து விட முடியும். எனவே தீயணைப்புத்துறையினர் வந்து பிடித்து வெளியில் விடும் வரை, வீடுகளை தீயணைப்புத்துறை முழுமையாக சோதனையிட்டு முடிக்கும் வரை கவனமாகவே இருங்கள் இவ்வாறு கூறினர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu