சசிகலா, தினகரன் அவசியம்- தேனி மாவட்ட அ.தி.மு.க. மீண்டும் பிடிவாதம்

தேனியில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., பேசினார்.
கடந்த மாதம் ஓ.பி.எஸ்., தலைமையில் அவரது பண்ணை வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், முன்னாள் எம்.பி., பார்த்திபன் ஆகியோர் அ.தி.மு.க.,வில் சசிகலாவையும், தினகரனையும் இணைக்க வேண்டும் என பேசினார். நிருபர்களிடம் பேட்டியும் கொடுத்தனர். இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஓ.பி.எஸ்., தம்பி ராஜாவையும், சில அ.தி.மு.க., நிர்வாகிகளையும் திருச்செந்துாருக்கு அனுப்பி சசிகலாவை சந்தித்தனர். இதற்கு இ.பி.எஸ்., தலைமையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனை தொடர்ந்து ராஜா உட்பட மேலும் சில அ.தி.மு.க., நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கி இப்பிரச்னைக்கு அ.தி.மு.க., தற்காலிக தீர்வு ஏற்படுத்தியது. இந்நிலையில் தேனியில் அ.தி.மு.க., மாவட்ட ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை, மாவட்ட செயலாளர் சையதுகான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் நடேசன், நகர செயலாளர் கிருஷ்ணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் சையதுகான், 'அ.தி.மு.க., மூன்று பெரும் தோல்விகளை சந்தித்துள்ளது. அ.தி.மு.க., பிரிந்து கிடப்பதே இந்த தோல்விக்கு காரணம். எனவே பிரிந்து கிடக்கும் கட்சிகளை மீண்டும் அ.தி.மு.க.,வுடன் இணைக்க வேண்டும். (சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்). அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் இணைத்தால் வெற்றி பெறலாம். இதற்கு தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய ஓ.பி.எஸ்., 'மாவட்ட செயலாளர் சையதுகான் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்' என மட்டும் கூறினார். சையதுகான் மீண்டும் சசிகலா, தினகரன் பிரச்னையை கிளப்பி உள்ளதால் அ.தி.மு.க.,வில் மீண்டும் சூடு கிளம்பி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu