ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?

ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?

பைல் படம்

ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி எம்பி உறுப்பினர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ததில் உண்மை நிலவரம்

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப்படுகொலை என பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. உண்மையில் ராகுல் காந்தி மீது வழக்குப் போட்டது பாஜக அல்ல. ராகுல் மீது வழக்குப் போட்டது நரேந்திர மோடியும் அல்ல. நரேந்திர மோடியை ராகுல் அவமானமாகப் பேசிவிட்டார் என்பதற்கான வழக்கும் அல்ல.

நீரவ் மோடி என்ற பிஸினஸ் ஆசாமி சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகளில் பெருந்தொகைகளைக் கடனாகப் பெற்று விட்டு - கட்டாமல் வெளிநாட்டுக்கு கம்பி நீட்டி விட்டார். ஒரு பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசும் போது ‘‘எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடியை பொதுவான குடும்பப் பெயராக வைத்திருக்கிறார்கள்’’ என்று பேசினார். அதாவது "மோடி என்றாலே ஃபிராடு தான"- என்கிற தொணியில் தான் மிகவும் அலங்காரமாகப் பேசுவதாக எண்ணிப் பேசிவிட்டார்.

மோடி, படேல், சோலங்கி இவை எல்லாம் குஜராத்தில் பல்வேறு சமூகங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின் பெயர்கள். ஒரு கிராமத்தில் ஆயிரம் மோடிகள் இருப்பார்கள், ஒரு பெரு நகரத்தில் லட்சம் படேல்கள் இருப்பார்கள். ராகுல் காந்தி இதை அறியாமல் - ஏதோ பிரதமர் நரேந்திர மோடியை வசை பாடுவதாக எண்ணிக் கொண்டு - "மோடி என்றாலே மோசடி"- என்று பேசப்போக..."மோடி" என்ற பின்னொட்டை தாங்கிய சமூகத்தில் இருந்து ஒருவர் ராகுல் மீது வழக்குப் போட்டு விட்டார்.

"ஒரு குறிப்பிட்ட ஜாதியை - சமூகப் பிரிவினரை இழிவு படுத்துவது போலப் பேசுவது"- என்பது தண்டனைக்குரிய குற்றம். சூரத் நீதிமன்றம் அந்த அடிப்படையில் "ராகுல் காந்தி குற்றவாளி"- என்று தீர்ப்பளித்து - அதற்கு அந்த சட்டப்பிரிவின் படி 2 ஆண்டு சிறை தண்டனை அளித்து இருக்கிறது. அதே நீதிமன்றம் ராகுல் விரும்பினால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு - அப்பீல் செய்யவும் அனுமதி அளித்து ஜாமீனும் தந்துள்ளது. இதன் அடிப்படையில் மக்களவை செயலகம் ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்துள்ளது.

இது DUE PROCESS OF LAW! இதில் பாஜக எங்கே வந்தது? "கருத்துரிமை" பறிப்பு எங்கே வந்தது? ஒரு குறிப்பிட்ட ஜாதியை - சமூகப் பிரிவை - "இந்த சாதிப் பின்னொட்டு வைத்துள்ளவன் அத்தனை பேரும் ஃபிராடு"- என்று பேசுவது "கருத்துரிமை"யா?

தமிழ்நாட்டில் அப்படி ஏதாவது ஒரு ஜாதியைக் குறிப்பிட்டு - "அதில் அத்தனை பயலும் ஃபிராடு"- என்றால் சும்மா விடுவார்களா? முதலில் இதனை அத்தனை கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். லால் பகதூர் சாஸ்திரி பிராமணர் அல்லாதவர் என்பதை அறியாமல் - வி.பி.சிங் தான் முதல் "பார்ப்பனர் அல்லாத இந்தியப் பிரதமர்"- என்று புரட்சிப் புளகாங்கிதம் அடைந்தனர்! (1989ல்)

இவர்களுடைய வரலாற்று அறியாமையும் பல்லிளித்தது. இவர்கள் சொல்வது படியே பார்த்தாலும் சரண்சிங் அதற்கு முன்பே (1979 ல்) சில நாள்களேனும் "பார்ப்பனரல்லாத" பிரதமர் ஆகிவிட்டார்! நீங்கள் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டினால் - மோடியை எதிர்த்தால் அதை அரசியல் நிகழ்வாக விட்டு விடுவார்கள்! ஆனால் "மோடி சாதி" யை விமர்சித்தால் வழக்குப் போட்டுக் கிழித்துத் தொங்கவிட்டு விடுவார்கள். அப்படித்தான் சிக்கி உள்ளார் ராகுல்காந்தி.

Tags

Next Story