ஆறு, குளங்களில் பொதுமக்கள் குளிக்கத்தடை: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் வைகை அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதையும் அப்படியே வெளியேற்ற, அணையை இன்று திறந்து விட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்கள், ஆறுகள், குளங்களில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.
தேனி மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், முல்லை பெரியாறு அணை, சுருளியாறு, சுரங்கனாறு, சண்முகாநதி, கொட்டகுடி ஆறு, வராகநதி, மஞ்சளாறு, வைகை ஆறு என அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு, வைகை அணைகள் நிரம்பி விட்டன. வைகை அணை நீர் மட்டம் 69 அடியை தாண்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதையும் அப்படியே வெளியேற்ற ஆட்சியர் முரளிதரன் இன்று அணையை திறந்து விட்டார். அணையில் இருந்து விநாடிக்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது குறித்து, ஆட்சியர் கூறியதாவது: அணைக்கு வரும் உபரி நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் தொடர்ந்து, அறுபத்தி ஒன்பது அடியிலேயே பராமரிக்கப்படுகிறது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால் ஆறுகள், குளங்களில் அதிக நீர் வரத்து உள்ளது. நீர் நிலைகளில், எந்த நேரமும் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் ஆறுகள், குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் கழுவக்கூடாது. கிராம நிர்வாக அலுவலர்கள் ஆறுகள், குளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu