தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

மேகமலையில் பெய்து வரும் பலத்த மழையால் சின்னசுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திற்கு அடுத்து வரும் ஐந்து நாட்கள் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னிநட்சத்திரம் தொடங்கியது முதல், தற்போது வரை மழை வெளுத்துக்கட்டி வருகிறது. மாவட்டம் முழுவதும் வெயிலின் தடம் முழுக்க மாறி, குளுகுளு சீசன் தொடங்கியது போல் காணப்படுகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்திற்கு அடுத்து வரும் ஐந்து நாட்கள் அதாவது வரும் மே 20ம் தேதி வரை அதீத கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேகமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சின்னசுருளி அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கும்பக்கரையில் குளிக்க அனுமதிக்கப்பட்டாலும், வனத்துறையினர் கண்காணிப்புடனும் விழிப்புடனும் இருந்து வருகின்றனர். கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழும் அபாயம் உள்ள இடங்களில் இருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அத்தனை ஆறுகள், கண்மாய்கள் வருவாய்த்துறை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மழைபாதிப்பு அதிகரித்தால் உடனே பேரிடர் மீட்புக்குழுவிற்கு தகவல் அளித்து அவர்களை வைத்து மீட்புபணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதே போன்ற ஆரஞ்சு அலர்ட் தேனி மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை உட்பட 28 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story