எதிர்க்கட்சி கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்?

எதிர்க்கட்சி கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்?

பைல் படம்

எதிர்க்கட்சி வரிசையில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது தீர்க்கமாகவோ, தீர்மானகரமாகவோ தெரியவில்லை.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சமூக நீதி கூட்டணி என 18 கட்சித் தலைவர்களை அழைத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது தீர்க்கமாகவோ, தீர்மானகரமாகவோ தெரியவில்லை.

கடந்த தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்து அறிவித்தார். அது வேறு விஷயம். ராகுலை பிரதமர் வேட்பாளராக சரத்பவாரோ, மம்தா பானர்ஜியோ, நிதிஷ்குமாரோ ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஒடிசாவின் நவீன் பட்னாயக் தனித்துவமாக எதையும் சாராமல் இருக்கிறார். கம்யூனிஸ்டுகள் வேறு வழியில்லாமல் காங்கிரசோடு உறவு தொடர்ந்தாலும், கேரளா, மேற்கு வங்கம், திரிபுராவில் காங்கிரசுக்கு எதிராகத்தான் நிற்க வேண்டிய கட்டாயம் கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளது.

1996 - இல் ஜோதிபாசுவுக்கு பிரதமர் பதவிக்கான வாய்ப்பு வந்தபோது அவருடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கடந்த கால நிகழ்வாகும். இந்திரா காலத்தில் காங்கிரசின் கடுமையான எதிர்ப்பாளாராக இருந்த காஷ்மீர் பரூக்அப்துல்லா மட்டும் தற்போது தெளிவாக தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். 1983 இல் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை காஷ்மீரில் கலைத்து, அவருடைய மைத்துனர் ஜி.எம்.சாவோவை பொம்மை முதல்வராக இந்திரா அமர்த்திய போது பரூக் அப்துல்லா பேசிய பேச்சுகள் இன்னும் பதிவுகளில் அப்படியே உள்ளன. காங்கிரசை எதிர்த்து உருவான ஜனதா கட்சி, வி.பி.சிங் தலைமையிலான ஜன் மோர்ச்சா, தேவகவுடா மற்றும் குஜ்ரால் ஆட்சிகள் என்ன ஆனது? இவர்கள் எல்லாரும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் தான். எனவே மூன்றாவது அணி எடுபடுமா என்பது சந்தேகமே?

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போதும், மூன்றாவது அணி பற்றிய பேச்சும் அடிபடும். சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத அணியில் சேர விரும்பாத அரசியல் தலைவர்கள், மூன்றாவது அணி பற்றி ஏப்ரல் முதல் வாரத்தில் சந்தித்துப் பேச இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இந்த மூன்றாவது அணியில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார், கேஜ்ரிவால், சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுக்கு மேற்கு வங்கத்தை விட்டால் வேறு புகலிடமில்லை. அகிலேஷ் யாதவின் கட்சி உ.பி.யுடன் முடங்கி விட்ட கட்சி. நிதிஷ் குமாருக்குப் பீகாருக்கு வெளியே ஆதரவு கிடையாது. நவீன் பட்நாயக், சந்திர சேகர ராவ் (தனியாக தேசியகட்சியை துவங்கியுள்ளார்).யாருக்கும் அவர்களது மாநிலங்களான ஒடிஸா, தெலங்கானா வைத் தவிர வேறு எங்கும் செல்வாக்கு கிடையாது. இந்த மூன்றாவது அணிக் கூட்டம் என்பது மாநிலத் தலைவர்களைக் கொண்ட கூட்டமே.

எல்லோருமே மாநிலத் தலைவர்கள் தான். இவர்கள் எப்படி அகில இந்திய அளவில் பரவியுள்ள பா.ஜ.க.வையும், காங்கிரஸையும் எதிர் கொள்வார்கள் என்பது புரியவில்லை. மேற்கண்ட தலைவர்களின் செல்வாக்கு அந்தந்த மாநிலங்களோடு முடிந்து விடுகின்றன. தங்கள் மாநிலச் செல்வாக்கை வைத்துக் கொண்டு எப்படி அகில இந்திய அளவில் மூன்றாவது அணியை நடத்த முடியும்? பா.ஜ.க.வுக்கு தென் மாநிலங்களில் கர்நாடகத்தைத் தவிர இதர தென் மாநிலங் களில் அதிகச் செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உ.பி., உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், ஓரளவு பிஹார், பஞ்சாப், சண்டிகார் போன்ற இடங்களில் பா.ஜ.க.வுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதுபோல் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.

காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அதற்கும் நாடு முழுவதும் வாக்கு வங்கி இருப்பதை மறுக்க முடியாது. எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு என்று கணிசமாகவோ, குறைவாகவோ வாக்கு வங்கிகள் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் கூட காங்கிரஸுக்கு தனித்த செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இந்த மூன்றாவது அணிக் கட்சிகளுக்கு அகில இந்திய அளவில் என்ன செல்வாக்கு இருக்கிறது? மாநிலக் கட்சிகளும் பா.ஜ.க.வும் ஒன்றாகுமா? இவையும் காங்கிரஸும்தான் ஒன்றாகுமா? அல்லது மூன்றாவது அணிக் கட்சிகள், தங்கள் மாநிலங்களில் வேண்டுமானால் தாங்கள் மூன்றாவது கூட்டணி என்று காட்டிக் கொள்ளலாமே தவிர, அவர்களுக்குச் செல்வாக்கோ, வாக்கு வங்கியோ இல்லாத பிற மாநிலங்களில் இவர்கள் வெறும் சைபர் தான்.

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார், சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் ஆகியோர் அவரவர் மாநிலங்களில் காங்கிரஸ், பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலைச் செய்யலாம். இந்த பா.ஜ.க.- காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் என்பது இவர்களுடைய மாநிலங்களில் தான் எடுபடுமே தவிர, இதர மாநிலங்களில் எடுபடாது. அவலை நினைத்துக் கொண்டு வெறும் உரலை இடிப்பதுபோல் மூன்றாவது அணி என்று இவர்கள் கட்சி கட்டுவது எந்தப் பலனையும் தரப் போவதில்லை. எனவே வரும் தேர்தலில் பா.ஜ.க - காங்., இடையே மட்டும் தான் பிரதமர் வேட்பாளர் போட்டியிருக்கும். இதில் பா.ஜ.க வே எளிதில் கரையேறும் என்பது இப்போதுள்ள சூழலில் தெளிவாகிறது.

Tags

Next Story