புதிய தொழில்முனைவோர் கடனுதவி திட்டம்: மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்

பைல் படம்
புதிய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தில் (நீட்ஸ்) 25 % மானியத்தில் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம். இத்திட்டம் சுருக்கமாக நீட்ஸ் என்று (New Entrepreneurs and Enterprises Development Scheme - N.E.E.D.S.) குறிப்பிடப்படுகிறது. வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப் படுகிறது.
இத்திட்டம் தமிழகத் தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். 18 முதல் 35 வயது வரை உள்ள (பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், B.C., M.B.C., S.C., S.T. ஆகியோருக்கு 45 வயது வரை) பட்டம், டிப்ளமோ அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒன்று தேர்ந்தெடுக்கும்.
இத்திட்டத்தில் காலிமனை இருந்தால் கட்டடம் கட்ட, இயந்திரம் வாங்க, நடைமுறை மூலதனத்திற்கும் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம். சொந்த நிலம் இல்லாவிடில், இயந்திரம் வாங்க, நடைமுறை மூலதனத்திற்குக் கடன் பெறலாம். கட்டடக் கடனும் பெறும்போது, அந்த நிலமே செக்யூரிட்டி ஆக ஏற்றுக்கொள்ளப்படும். வாடகைக் கட்டடத்தில் இயங்கினால் 40% (கடனில்) தொகைக்கு ஏதேனும் நிலம் அல்லது கட்டடம் ஜாமீனாகத் தரவேண்டும். வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகக் கிளைகள் மூலம் பெறலாம். 25% மானியம் உண்டு.கடன் ஒப்புதல் கிடைத்ததும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியும், உதவித்தொகையும் வழங்கப்படும். திட்டத்தின் முழு விவரம் பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (PMEGP):(PMEGP) Prime Minister's Employment Generation Programme, இது மத்திய அரசுத் திட்டம். கிராமங்களில் இந்தியக் கதர் கிராமத் தொழில்கள் ஆணையமும், நகர்ப்புறங்களில் மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிகளும் இத்திட்டக் கடனை வழங்குகின்றன. உற்பத்திப் பிரிவுக்கு ரூ.25 லட்சமும், சேவைப் பிரிவுக்கு ரூ.10 லட்சமும் கடனாக வழங்கப்படும். இதில் உற்பத்திப் பிரிவில் ரூ.10 லட்சம் வரை, சேவைப் பிரிவில் ரூ.5 லட்சம் வரை பெற 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தத் தொகைக்கு கீழ் என்றால் கல்வித்தகுதி தேவை இல்லை.
தேவையான விண்ணப்பத்துடன், திட்ட அறிக்கை இணைத்து மாவட்டத் தொழில் மையம், அல்லது கதர் கிராமத் தொழில் oஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நேர்காணலில் தேர்வு பெற்று வங்கி அனுமதிக்குப் பின் இரண்டு வாரம் 'தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி' பெற வேண்டும். தொழில் தொடங்கத் தேவையான தொகையில் 5% முதல் 10% வரை விண்ணப்பதாரர் முதலீடு செய்ய வேண்டும். 25% முதல் 35% வரை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ஏதேனும் பொருட்கள் உற்பத்தி செய்வோர் தங்கள் உற்பத்தியைச் சந்தைப்படுத்த பொருட்காட்சிகள், விற்போர் - வாங்குவோர் சந்திப்பு ஏற்பாடு எனப் பல உதவிகளை அரசு செய்யும். கிராமங்களில் ஏழை எளியவர்கள், வேலை இல்லாமல் இருப்போருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பீடி, வெற்றிலை, சிகரெட், சுருட்டு தயாரிப்பு, புகையிலை பயிரிடுதல், பட்டுப்புழு வளர்ப்பு, அறுவடை இயந்திரங்கள், 20% மைக்ரானுக்கு குறைவான பாலிதின் பைகள் தயாரிப்பு ஆகிய தொழில்களுக்கு இத்திட்டத்தின் கடன் கிடையாது. முழு விவரம் பெற www.kviconline.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
இத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள இளைஞர்கள் குறைந்த பட்சம் 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும். தொழில் முனைவோர் ஆகலாம். 8ம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு, பொறியில் படிப்பை முடித்தவர்களும் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் தங்களது திறமையை பயன்படுத்தி புதிதாக தொழில் துவங்க உதவும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியக் கடன்கள் வழங்கப்படுகிறது.
இந்த மையத்தை அணுகி தொழில் முனைவோராகும் விருப்பத்தை தெரிவித்து விண்ணப்பித்தால் போதும். மாவட்டத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள், குறிப்பிட்ட தொழிலை செய்வதற்கான நடைமுறைகள், கணக்கு வைத்தல், உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தல், லாபம் சம்பாதித்தல் மற்றும் தொழிலை வெற்றிகரமாக நடத்தவும் மாவட்ட தொழில் மையம் மூலம் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu