தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல்..!

தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது:  விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல்..!

108 ஆம்புலன்ஸ் (கோப்பு படம்)

தேனி மாவட்டத்தில் பல 108 ஆம்புலன்ஸ்கள் பழுதாகி நிற்பதால் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

தேனி மாவட்டத்தில் மொத்தம் பதினெட்டு 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதில் பராமரிப்பு இல்லாததால் பல நாட்கள் பாதிக்கும் மேற்பட்ட வண்டிகள் (‛டவுன்டைம்’) பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டு விடுகின்றன. தேனி தாலுகாவிற்கே ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது.

மதுரை, திண்டுக்கல், கம்பம், மூணாறு ரோடுகள் சந்திப்பில் இருப்பதாலும், நகரின் முக்கிய தெருக்களில் நெரிசல் நிலவதாலும் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. விபத்தில் சிக்கியவர்களை உடனே மீட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இப்படி நெருக்கடியான நேரங்களில் பெரியகுளம், வீரபாண்டி, க.விலக்கில் இருந்து வண்டி வர வேண்டி உள்ளது. இது போன்ற சிக்கல்கள் மாவட்டம் முழுவதும் நிலவுகின்றன. மாதத்தில் குறைந்தது 10 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை பாதி வண்டிகள் ‛டவுன்டைம்’ ஆகி விடுகின்றன.

இதனால் விபத்தில் சிக்கியவர்களையும், நெருக்கடியான சூழலில் சிக்கி அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களையும் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது என ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து 108 நிர்வாகிகள் கூறியதாவது:

தற்போதைய நிலையில் மாவட்டத்தில் 17 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. கூடலுாரில் உள்ள ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் ‛டவுன்டைமில்’ உள்ளது. நாங்கள் முடிந்த அளவு அனைத்து நாட்களும் எல்லா ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படும் வகையில் கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

Tags

Next Story