ஜனகனமன மலையாளத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட விவசாயிகள் எதிர்ப்பு

மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் அந்தோணி இயக்கத்தில், மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் மம்தா மோகன்தாஸ் நடித்துள்ள *ஜன கன மன* திரைப்படம், சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.
சமூகநீதி, பல்கலைக்கழகங்களில் நடக்கும் சாதிய ஏற்றத் தாழ்வுகள், வன் கொடுமைகள் குறித்து ஜன கன மன திரைப்படம் பேசி இருப்பதாக, தமிழகத்தில் உள்ள சில பத்திரிக்கைகளும் அந்தத் திரைப்படத்திற்கு புகழாரம் சூட்டியிருக்கின்றன.அந்த திரைப்படம் எதைப்பற்றி பேசியிருந்தாலும் நமக்கு கவலை இல்லை. ஆனால் சமூக ஏற்றத் தாழ்வுகளை பற்றி பேசுவதற்கான தகுதி பிரித்திவிராஜூக்கு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பது தான் ஐந்து மாவட்ட விவசாயிகளின் உரத்த பதிலாக உள்ளது.
ஒரு கலைஞன் என்பவன் மொழி இனம் நிலம் என அனைத்திற்கும் அப்பாற்பட்டவன். அவன் அனைவரையும் மகிழ வைப்பவன் என்பதைத் தாண்டி, சமூகங்களின் ஒற்றுமைக்கான குரலாக அவன் இருந்திருக்க வேண்டும். ஆனால் திரைப்படங்களில் ஏதோ தேவதூதனைப் போல தன்னை காட்டிக் கொள்ளும் இந்த பிருத்விராஜ், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எழுதிய கீச்சை, தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட, ஐந்து மாவட்டங்களில் வாழும் விவசாயிகள் எவரும் மறந்துவிட வில்லை.
அவர் எழுதிய செய்தி இதுதான்...*Decommission mullaperiyar dam* என்று அபசகுணமாக தொடங்கி... உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரசியலையும், பொருளாதாரத்தையும் ஒதுக்கிவிட்டு, சரியானதை செய்ய வேண்டிய நேரமிது. சிஸ்டத்தை மட்டுமே நம்ப முடியும். சிஸ்டம் சரியான முடிவை எடுக்க பிரார்த்திப்போம் என்று கொளுத்திப் போட்டார். ஏற்கெனவே மலையாள நடிகரான உன்னி முகுந்தன் மற்றும் அனிகா ஆகியோர் சமூக வலைதளங்களில், பெரியாறு அணையைக் குறித்து விஷத்தைக் கக்கிய நிலையில், பிரிதிவிராஜனின் இந்த அறைகூவல், கேரள முழுவதும் வலிமையாக எதிரொலித்தது.
இன்று *Decommission mullaperiyar dam* என்கிற சொல்லாடல், வலிமையாக கேரள மாநிலம் முழுவதும் உச்சரிப்பதற்கு காரணம் சாட்சாத் இந்த பிரிதிவிராஜன் தான். ஐந்து மாவட்டங்களில் இந்த அணையை நம்பி 10 லட்சம் விவசாயிகளும், 90 லட்சம் மக்களும் அநியாயத்திற்கு காத்துக்கிடக்கும் நிலையில், ஒரு நடிகர் இத்தகைய விஷத்தை கக்கியது, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் ஆயிற்று.
உச்சநீதிமன்றத்தால் 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட தெளிவான தீர்ப்புகளின் மூலம் உறுதியாக இருப்பதாக அறுதி இடப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை, பலவீனமாக இருக்கிறது என்று சொல்வதற்கு பிரித்திவிராஜுக்கு தெரிந்த முகாந்திரம் என்ன என்பதை குறித்து அப்போதே கேள்வி எழுப்பினோம். அந்தக் கேள்வி இன்னமும் நிலுவையில் இருக்கிறது என்பதை பிரித்திவிராஜ் மறந்துவிடக்கூடாது.
உன் வீட்டுக் குழந்தை குடிப்பதற்கு பால் முதல் நீ சொகுசாக படுத்துறங்குவதற்கு தேவையான சிமெண்ட் வரை, அறுபத்தி நான்கு வகையான உணவுப் பொருள்களை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சிக்க நினைத்த மலையாள நடிகர் பிரித்திவிராஜே உன் படத்தை தமிழகத்தில் திரையிட எப்படி மனசு வந்தது.
இல்லாத ஒன்றை கூறி மலையாள மக்களின் மனதில் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆறாத வடுவை ஏற்படுத்திய பிரித்திவிராஜ் நடித்த ஜன கன மன திரைப்படத்தை, தமிழக திரையரங்குகளில் திரையிட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஒத்துழைக்கக் கூடாது.இந்தப்படம் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் வெளியிடப்பட்டால், தியேட்டர்களை ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் முற்றுகையிடுவோம்.
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுக்கிறேன் என்கிற போர்வையில் தன்னுடைய சுயரூபத்தை காட்டிய பிரித்திவிராஜ் சுகுமாரனுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் ஐந்து மாவட்டத்தில் வாழும் அப்பாவி விவசாயிகள் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இ.சலேத்து, பொன் காட்சி கண்ணன், ச.அன்வர் பாலசிங்கம், தேவாரம் தாமஸ் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu