தொழில் முனைவோருக்கு கடன்: வங்கிகளுக்கு தேனி கலெக்டர் அறிவுரை

தொழில் முனைவோருக்கு கடன்: வங்கிகளுக்கு தேனி கலெக்டர் அறிவுரை

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா சிறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தொழிற்கடன் வழங்கும் முகாமில் 244 பயனாளிகளுக்கு ரூ.38.44 கோடி கடன்களை தேனி ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார்.

தேனி மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், மகளிர் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில், தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் வழங்கும் முகாமில் 244 நபர்களுக்கு ரூ.38.44 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகளை தேனி ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார்.

இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: மாவட்ட அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் தொழில் வளத்தை பெருக்குவதற்காகவும் இம்முகாம் நடத்தப்படுகிறது.

முன்மாதிரி திட்டமாக முதல் தலைமுறையினருக்கு தொழில் தொடங்குபவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதை முதலமைச்சர் தொழில் முனைவோர்களுக்கான கூட்டத்தில் பாராட்டினார்கள். அதன் வெற்றியை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தொழில் முனைவோர்கள் தொழில் செய்ய முற்படும்போது, தொழிலை பற்றிய முழு புரிதல் இருப்பதுடன், வங்கி கடனை திரும்ப செலுத்துவதிலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தொழில் முனைவோரால் மட்டுமே சமுதாயத்தில் வேலைவாய்ப்பினை பிறருக்கு வழங்கி அவர்களின் வாழ்வதாரத்தினை உயர்த்த முடியும்.

தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதுமையான தொழில்களை கண்டறிந்து துவங்கிடவும், மதிப்புக் கூட்டப்பட்ட உணவு சார்ந்த தொழில்களை மேம்படுத்திட வேண்டும். சமுதாயத்திற்கு பயனளிக்க கூடிய தயாரிப்புகளை கண்டறிந்து உருவாக்கிட முன்வர வேண்டும். தொழில் தொடங்க வரும் தொழில்முனைவோர்களுக்கு வங்கியாளர்கள் கால தாமதமின்றி, கடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றார்.

  • வங்கியின் மூலம் பொது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.1703.71 இலட்சம் கடனுதவியும்,
  • மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின்(AABC) கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.113.23 இலட்சம் கடனுதவியும்,
  • புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்(NEEDS) திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.564.37 இலட்சம் கடனுதவியும்,
  • பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் 23 பயனாளிகளுக்கு ரூ.125.29 இலட்சம் கடனுதவியும்,
  • பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.52.69 இலட்சம் கடனுதவியும்,
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (UYEGP) 25 பயனாளிகளுக்கு ரூ.93.19 இலட்சம் கடனும்,
  • தாட்கோ (TAHDCO) நிறுவனத்தின் சார்பில் 38 பயனாளிகளுக்கு 147.58 இலட்சம் கடனுதவியும்,
  • மகளிர் திட்டத்தின் சார்பில் (Bulk Loan) 100 சுய உதவி குழுக்களுக்கு 859.00 இலட்சம் கடனுதவியும்,

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) தொடங்க 1 பயனாளிக்கு 185.25 இலட்சம் கடனுதவியும் என மொத்தம் 244 பயனாளிகளுக்கு ரூ.38.44 கோடி மதிப்பிலான கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

முன்னதாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் பெ.சு.அசோகன், முன்னோடி வங்கி மேலாளர் டி.மோகன்குமார், உட்பட பல்வேறு வங்கி மேலாளர்கள், அலுவலர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story