கொடைக்கானல் மூணாறு ரோட்டினால் இப்படி ஒரு பயனா?

கிளாவரை, கவுஞ்சி, பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட கொடைக்கானல் தாலுகாவிலுள்ள கேரள எல்லையோர கிராமங்களிலும், வட்ட வடை, கோவிலூர், கொட்டக்கம்பூர், எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, நெற்றி முடி, அருவிக்காடு உள்ளிட்ட தமிழக எல்லையோர கேரள கிராமங்களிலும் இந்த ரோடு அவசியம் தேவை என்ற கோரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொடைக்கானல் தாலுகாவில் உள்ள கடைசி கிராமமான கிளாவரையிலிருந்து, 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தேவிகுளம் தாலுகாவில் உள்ள கொட்டக்கம்பூரை அடைய, சாலை மார்க்கமாக சென்றால் 252 கிலோ மீட்டர் துாரம் பயணிக்க வேண்டும்.
அதாவது கொடைக்கானல், பெரியகுளம், தேனி, போடி, போடிமெட்டு, பூப்பாறை, தேவிகுளம், மூணாறு, கிராம்ஸ்லேண்ட், மாட்டுப்பட்டி, எல்லபட்டி, டாப் ஸ்டேஷன் வழியாக வட்டவடை சென்று கோவிலூரை அடைய வேண்டும். 12 கிலோமீட்டருக்கும், 252 கிலோ மீட்டருக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
கொடைக்கானலில் இருந்து கிளாவரை 45 கிலோமீட்டர், அங்கிருந்து 12 கிலோமீட்டர் கொட்டக்கம்பூர். கொட்டக்கம்பூரில் இருந்து மூணாறு வரை வெறும் 44 கிலோ மீட்டர் மட்டுமே... ஆக கொடைக்கானலில் இருந்து மூணாறு செல்வதற்கான மொத்த தூரம் 101 கிலோ மீட்டர் மட்டுமே. ஆனால் இதையே தற்போதுள்ள சாலை வழி சென்றால் 196 கிலோ மீட்டர்களை கடக்க வேண்டும். கிட்டத்தட்ட நுாறு கி.மீ., துாரம் கூடுதலாக பயணிக்க வேண்டி உள்ளது.
கொடைக்கானல்- மூணாறு ரோடு அமைத்தால் 100 கி.மீ., துாரம் பயண நேரம் மிச்சம், எரிபொருள் மிச்சம், இருபுறமும் உள்ள விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் இப்படி பன்முகத்தன்மை கொண்ட சாலையை, எதற்காக கேரள வனத்துறை பூட்டி வைக்க வேண்டும்.
இந்த ரோடு போடப்பட்ட 1925 ம் ஆண்டு முதல், இருபுறமும் போக்குவரத்து இருந்தே வந்திருக்கிறது. கரடு முரடாகக் கிடந்த இந்த ரோட்டை சென்னை மாகாணம் ஓரளவு செப்பனிட்டதால், அதற்குப் பின்னால் அந்த வழியாக போக்குவரத்து கூடியுள்ளது. மொழிவழிப் பிரிவினையின் போது முறையாக அளக்கப்படாத இடத்தில் அமைந்திருக்கிறது இந்த ரோடு. குறைந்தபட்சம் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் கலந்தாலோசித்து, குரங்கணி முதல் மறையூர் வரை நில அளவை செய்தாலே, இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்று தெரிந்துவிடும்.
ஒட்டு மொத்தமாக 822 கிலோமீட்டர் நீளமுள்ள கேரள-தமிழக எல்லைகளை அளக்காவிட்டால் கூட பரவாயில்லை, குரங்கணி முதல் மறையூர் வரையாவது அளவீடு செய்ய தயாராகுமா கேரளா...? என்று கேள்வி எழுப்பி உள்ள பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள்,
‘இது குறித்து விரிவான அறிக்கையினை கேரள தலைமைச் செயலாளருக்கு அனுப்ப இருக்கிறோம். முறையான பதில் வந்தால் தமிழக அரசின் ஒப்புதலோடு அந்தப் பாதையை திறப்பதற்குண்டான வேலையை முன்னெடுப்போம். என கூறி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu