தேனியில், மூன்று ஆண்டுகளாக முடங்கிய முருங்கை ஏற்றுமதி மையம்

முருங்கை ஏற்றுமதி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர, முருங்கை விவசாயிகள் கோரிக்கை.
Today Theni News -கடந்த ஆண்டு, தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது, விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்த, வேளாண்மைத்துறை அமைச்சர், தேனியில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும் என, அறிவித்துள்ளார். 'இந்த அறிவிப்பு எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், முருங்கை விவசாயிகளுக்கு வாழ்வளிக்க, 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட முருங்கை ஏற்றுமதி மையம், மூன்று ஆண்டுகளாக மூடியே உள்ளது. அதை முதலில், பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கூறியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில், முருங்கை விளைச்சல் அபரிமிதமாக உள்ளது. ஆண்டிபட்டி, சின்னமனுார், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியங்களில் முருங்கை கீரை, முருங்கை காய் விளைச்சல் மிகவும் அதிகம். இங்கிருந்து பல வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் முருங்கை கீரை, முருங்கை காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சில நேரங்களில் விலை அதிகமாக கிடைத்தாலும், சீசன் நேரம் விலை மிகவும் சரிந்து விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தேனி வேளாண்மை விற்பனைத்துறை மற்றும் வணிக வரித்துறை சார்பில் பெரியகுளம் ரோட்டோரம் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அலுவலகத்துடன் முதன்மை பதப்படுத்தும் நிலையம் மற்றும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது. இதற்கு மட்டும் 2 கோடி 87 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக, கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து உழவர்சந்தை செயல்பட வசதியாக, தகர கொட்டகைகள் அமைக்கப்பட்ட வணிக மையம் தனியாக செயல்படுத்தப்பட்டது. இதற்கும் பல லட்சம் ரூபாய் (தோராயமாக 40 லட்சம் ரூபாய் வரை)செலவிடப்பட்டுள்ளது.
தற்காலிக உழவர் சந்தை சில தினங்கள் மட்டும் செயல்பட்டது. ஆனால் முதன்மை பதப்படுத்தும் நிலையமும், குளிர்பதன கிடங்கும் ஒருநாள் கூட செயல்படவில்லை. இந்த மையத்தில் முருங்கை காய், கீரை, பூக்கள் மற்றும் இதர காய் வகைகள், கீரை வகைகளை உலர வைத்து, 'பேக்கிங்' செய்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மையம் செயல்பட்டால், விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் விற்பனைத்துறை அதிகாரிகளின் அக்கறையின்மை காரணமாக, இந்த மையம் ஒரு நாள் கூட செயல்படவில்லை. மாவட்ட கலெக்டர் முரளிதரன் இந்த விஷயத்தில் தலையிட்டு, நேரில் ஆய்வு செய்து மையம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு கடந்த பின்னரும், இன்னும் முருங்கை ஏற்றுமதி மையம் அமைக்கப்படவில்லை. இதனை செயல்படுத்திய பின், முருங்கை ஏற்றுமதி மண்டலத்தை அமைக்கலாம். இந்த பதப்படுத்தும் மையமும், ஏற்றுமதி மண்டலமும் செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் இரண்டுமே முடங்கி உள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu