தீ பற்றி எரிகிறது பசுமைக்காடுகள் நிறைந்த மேகமலை வனப்பகுதி

தீ பற்றி எரிகிறது பசுமைக்காடுகள் நிறைந்த  மேகமலை வனப்பகுதி

மேகமலையில் பற்றி எரியும் காட்டுத்தீ.

பசுமைக்காடுகள் நிறைந்த மேகமலை வனபகுதி தீ பற்றி எரிவதால் அதனை அணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மேகமலை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்து ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக பெரியாறு புலிகள் சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதி, சிவகிரி வனப்பகுதி, தென்காசி வனப்பகுதி என நீண்டு கொண்டே செல்கிறது. இதில் மேகமலை மிகுந்த பசுமைக்காடுகள் கொண்ட ஒரு வளமான வனப்பகுதி ஆகும். உலகில் வளம் நிறைந்த வனங்களின் பட்டியலில் இடம் பெற்ற மேகமலையில் பல்வேறு வகை அபூர்வ உயிரினங்கள் உள்ளன. இதன் வளத்தை பற்றி பல நுாறு பக்கங்கள் எழுதலாம். அவ்வளவு பெரிய வனப்பகுதி.

தென்மேற்கு பருவமழை கை விட்ட நிலையில், வெயிலின் கடுமை வாட்டுவதால் மேகமலை வறண்டு காணப்படுகிறது. மேகமலை வறண்டது மிக சாதாரண விஷயமே இல்லை. மிக, கவனமாக கவனிக்க வேண்டிய விஷயம். மிகவும் கவலைக்குரிய விஷயம். வறண்டது மட்டுமல்ல. தற்போதய வெயிலின் கடுமையால் தீ பற்றி எரிகிறது.

இதனால் வனவளம் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இங்கு வாழும் வனவிலங்குகளின் நிலை மிகவும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது. புலி முதல் யானை வரை, அத்தனை வகையான மான்கள், கரடிகள், குரங்குகள் என பல வகை விலங்கினங்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த வனவிலங்குகளுக்கு குடிக்க தண்ணீரும் இல்லை. வனத்தில் பரவி உள்ள தீயால் இந்த விலங்கினங்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

தமிழக அரசு இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, மேகமலையில் பற்றி எரியும் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வன ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை ஆக உள்ளது.

Tags

Next Story