தட்டாங்காய், துவரங்காய், மொச்சை: தேனி மாவட்டத்தில் சீசன் தொடக்கம்..!

தட்டாங்காய், துவரங்காய், மொச்சை:   தேனி மாவட்டத்தில் சீசன் தொடக்கம்..!

கூடலுார் கழுதைமேடு மலைப்பகுதியில் விளைந்து தேனி மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தள்ள சீன ரக விதை மூலம் விளைந்த தட்டாங்காய்.

தேனி மாவட்டத்தில் தட்டாங்காய், துவரங்காய், பச்சை மொச்சை சீசன் தொடங்கி உள்ளது.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கம்பம் கூடலுார் மற்றும் சுற்றுக்கிராம பகுதிகளில் பச்சை மொச்சை, துவரங்காய், தட்டாங்காயம் சீசன் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு மழை சிறப்பாக இருந்ததால் இவற்றின் விளைச்சலும் நல்ல முறையில் இருந்தது.

அதேபோல் விலையும் அதிகம் விற்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்தே பச்சை மொச்சை, துவரை கிலோவிற்கு 30 ரூபாய் வரையும், தட்டாங்காயம் 40 ரூபாய் வரையும் விலை கொடுத்து வாங்குகின்றனர். இவற்றை சில்லரை மார்க்கெட்டில் பச்சை மொச்சை கிலோ 50 ரூபாய் வரையும், தட்டாங்காயம் கிலோ 60 ரூபாய் வரையும் விற்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கம்பம், கூடலுார், உத்தமபாளையம் பகுதியில் விளையும் பச்சை மொச்சை, தட்டாங்காய்க்கு சிறப்பு சுவை உண்டு.

அதுவும் கூடலுார் கழுதைமேடு மலைப்பகுதியில் விளையும் பச்சைமொச்சைக்காயினை வாங்க கடும் போட்டி நிலவும். மாநிலம் முழுவதும் விளையும் பச்சை மொச்சையில் கூடலுார் கழுதைமேடு மலைப்பகுதியில் விளையும் மொச்சைக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த பச்சை மொச்சையினை குழம்புக்கும் பயன்படுத்துவார்கள்.

பயற்றினை தனியே பிரித்து, தோல் உரித்து எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுவார்கள். இதனால் இதற்கு மவுசு அதிகம். இந்த ஆண்டு வீரிய ரக விதைகள் மூலம் தட்டாங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. இது மிகவும் நீளமான காயுடன், உருண்டு திரண்ட பயறுடன் உள்ளது. இந்த தட்டாங்காய்க்கு தண்ணீர் அதிகம் தேவை. இந்த ஆண்டு மழை அதிகம் பெய்ததால் விளைச்சல் அமோகமாக உள்ளது. கம்பம், கூடலுார் பகுதிகளில் இருந்து மதுரை, திணடுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு லாரிகளில் தினமும் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கூறினர்.

Tags

Next Story