போடி புறவழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்
தேனி- போடி ரோடுகள் சந்திக்கும் பைபாஸ் ரோடு. இங்கு போக்குவரத்து சிக்னல் வசதி தேவைப்படுகிறது.
தேனி நகரத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதன் காரணமாக தேனி நகருக்குள் வர வேண்டிய அவசியம் இல்லாமல் வாகனங்கள் புறவழிச்சாலையில் தேனியை கடந்து சென்றன.
திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலை தேனியின் நகருக்கு வெளியே கடந்து செல்கிறது. இதற்காக தேனியின் மேற்கு பகுதியில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு தேனி நகரை கடக்கும் முன்னரே ஐந்து இடங்களில் சிறிய அளவிலான ரோடு சந்திப்புகள் குறுக்கின்றன. குறிப்பாக போடி செல்லும் ரோடு சந்திப்பு தான் மிகவும் ஆபத்தான பகுதியாக உள்ளது. தேனி பைபாஸ் ரோட்டில் எந்த அளவு வாகனங்கள் செல்கின்றனவோ, அதே அளவு போடி ரோட்டிலும் வாகனங்கள் செல்கின்றன.
இந்த ரோடு சந்திக்கும் நான்கு முனை சந்திப்பு மிகவும் விசாலமானதாக இருந்தாலும், வாகனங்களின் எண்ணிக்கை, வேகத்தை ஒப்பிடும் போது, இந்த பகுதி அபாயகரமானதாக மாறி உள்ளது. இதனை விட வருத்தமான விஷயம் இந்த இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளோ, சிறிய அளவிலான சிக்னல்களே இல்லை. இந்த இடத்தை வாகனங்கள் நிதானமாக கடந்தாலும், விபத்துக்களை தவிர்க்க முடியவில்லை.
சிக்னலை கடந்ததும் போடியை நோக்கி செல்லும் வாகனங்கள், டூ வீலர்களின் வேகம் அதிகரிக்கிறது. இதனால் கடும் விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் இரு பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ப்பலியும் ஏற்பட்டது. போடி ரோடு- தேனி பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து சிக்னல் அமைப்பதோடு, போடி வரை வழிகாட்டு பலகைகள், விபத்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த இடம் மட்டுமல்ல, தேனி மாவட்டத்தில்இதே போல் பல இடங்கள் உள்ளன. அத்தனை இடங்களிலும் போக்குவரத்துக்கு பாதுகாப்பான வசதிகள் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu