வனப்பரப்பினை 15 சதவீதம் அதிகப்படுத்தினால் மட்டுமே நாம் வாழத் தகுதியான இடம் கிடைக்கும்..!

வனப்பரப்பினை 15 சதவீதம் அதிகப்படுத்தினால் மட்டுமே நாம் வாழத் தகுதியான இடம் கிடைக்கும்..!

தேனி மாவட்டம், சின்னமனுார் தேசியவாதியும், இயற்கை ஆர்வலரும், விவசாயியுமான பாஷ்யம். 

தற்போதைய வனப்பரப்பினை இன்னும் 15 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே மக்கள் வாழ முடியும்.

தேனி மாவட்டம், சின்னமனுாரை சேர்ந்த இயற்கை ஆர்வலரும், தேசியவாதியும், விவசாயியுமான பாஷ்யம் இது குறித்து கூறியதாவது:

வனப்பரப்பை சமநிலைப்படுத்த 33 சதவீதம் மரங்கள் வேண்டும். இப்போது இருப்பது ஆறு முதல் 19 சதவீதம் மட்டுமே. ஆகையால் தான் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. ஆகையால் மரங்களை நட வேண்டும். இன்னும் பத்து வருடங்களில் வெயில் இப்பொழுதுள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும். அப்பொழுது நம்மால் அதி வெப்பத்தை தாங்க இயலாது. பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு சிரமம். தற்போது உள்ள சூழலில் 15 சதவீதம் வரை வனப்பரப்பினை அதிகப்படுத்தினால் மட்டுமே வாழ முடியும்.

இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது. நம் வீட்டைச் சுற்றி இடமிருப்பின், முடிந்த அளவிற்கு மரங்களை நடுவோம். மரம் நடுவோம் இயற்கையை காப்போம். தற்போது மழை காலம் தொடங்கி உள்ளது. அப்பொழுது தமிழகத்தில் 10 கோடி மரக் கன்றுகள் நட இப்பொழுதே திட்டமிடுவோம்.

மரக் கன்றுகள் உற்பத்தியாளர்கள், வனத்துறை, பள்ளித் தாளாளர்கள், உயர் பதவிகளில் இருப்போர், பிரபலங்கள், ஆன்மீக தலைவர்கள், அனைத்து மதங்களின் குருமார்கள், கிராமத் தலைவர்கள், ஊர் தலைவர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம். அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள்.

1 கோடி குடும்பமும் தலா 10 மரக் கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மரக்கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும். இதே போல் சில வருடங்கள் தொடர்ந்து செய்தால், வரும் 2030 க்குள் தமிழகமும் குளிர்ந்து போகும். அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள். இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.

மரக் கன்றுகள் நடுங்கள். அல்லது மரக் கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது நட உதவுங்கள். மரக் கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்பொழுதே முன் பதிவு செய்து வைக்கவும்.

பொது இடங்களில்:

1. புங்கன் மரம்

2. வெப்ப மரம்

3. ஆவி மரம்

4. அரச மரம்

5. குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம்

இவைகளை நன்கு வளர்ந்த கன்றுகளாகப் பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் புங்கன் மரத்தை ஆடு மாடுகள் மேயாது.

நீர் வழித் தடங்கள் அருகில்:-

1. பூவரசு மரம்

2. பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டுக்கு அருகிலுள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.

1. கருவேப்பிலை

2. லட்சக்கொட்டைக் கீரை

3. தேக்கு

4. நாட்டு மா மரம்

5. நாட்டுபலா

6. நாட்டுஅத்தி

7. குமிழ்

8. மகாகனி

9. மலைவேம்பு

போன்ற மரங்கள் நடலாம்

வழிபாட்டுத் தலங்கள்-

1. மரமல்லி

2. மகிழம்மரம்

3. மனோரஞ்சிதம்

4. பாரிஜாதம்

5. புன்னைமரம்

6. செண்பக மரம்

7. மருதாணி போன்றவற்றை நடலாம்

2030 இல் பச்சைப் பசேல் என்ற தமிழகத்தை உருவாக்குவோம். இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். மர கன்றுகள் நடுவதற்கு ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம். வெப்ப அலைகளுக்கு எதிரான ஒரு போர் போல் தான் இதுவும். இதில் ஒன்றுபட்டு வென்று காட்டுவோம். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story