மீண்டும் சைவத்திற்கு மாறிய ஓட்டல்கள்

மீண்டும் சைவத்திற்கு மாறிய ஓட்டல்கள்
சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் பக்தர்களுக்காக அசைவ ஓட்டல்கள் மீண்டும் சைவத்திற்கு மாறி விட்டன.

தேனி மாவட்டத்தில் அசைவ ஓட்டல்கள் தான் மிக, மிக அதிகம். அதிலும் ரோட்டோரங்களில் அசைவ ஓட்டல்கள் மிகவும் அதிகமாக உள்ளன. இந்த ஓட்டல்களில் அசைவ வியாபாரம் களை கட்டும்.

ஆனால் கார்த்திகை மாதம் சபரிமலை சீசன், முருக பக்தர்கள் சீசன், தாய் மூகாம்பிகை பக்தர்கள், ஆதிபராசக்தி கோயில் சீசன் தொடங்கி விடும். குறிப்பாக சபரிமலைக்கு வந்து செல்லும் பக்தர்களில் நான்கில் ஒரு பங்கு பக்தர்கள் தேனி மாவட்டத்தை கடந்தே சபரிமலை செல்கின்றனர்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் மாலை அணிந்து விரதம் தொடங்கினாலும், அந்த குடும்பத்தினர் அத்தனை பேரும், அவருக்காக மாலை அணியாமலேயே விரத நடைமுறைகளை தொடங்குவார்கள். இதனால் வெளியூர் பக்தர்களும் வருவதில்லை. உள்ளூர் பக்தர்களும் வருவதில்லை. அசைவ ஓட்டல்களி்ல் வியாபாரம் டல் அடிக்கும்.

எனவே இந்த குறிப்பிட்ட மாதங்களில் அசைவ ஓட்டல்களில் பெரும்பாலானவை சைவத்திற்கு மாறி விடும். தை பொங்கல் முடிந்து குறிப்பாக சபரிமலை மகரஜோதியும், பழனி முருகன் கோயி்ல் விசேசம் நிறைவடைந்ததும் இந்த ஆன்மீக சீசன் முடிவுக்கு வந்து விடும். அதன் பின்னர் இந்த ஓட்டல்கள் மீண்டும் அசைவத்திற்கு மாறி விடும்.

இந்த ஆண்டுக்கான ஆன்மீக சீசன் தொடங்கி விட்டது. இனிமேல் உள்ளூர் கோயில் திருவிழாக்களும் களை கட்டும். ஒவ்வொரு கோயிலிலும் வசதிக்கு தகுந்தபடி வேறு, வேறு நேரங்களில் திருவிழா நடக்கும். இதனால் தேனி மாவட்டத்தில் அசைவத்திற்கு மாறியிருந்த ஓட்டல்கள் அத்தனையும் மீண்டும் சைவத்திற்கு மாறி விட்டன. இதனால் மது அருந்துபவர்களில் பெரும்பாலானோர் இரவு உணவினை ஓட்டல்களில் சாப்பிடுவதாலும், அதுவும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதாலும், அவர்களுக்கென தனியாக தள்ளுவண்டி கை வண்டி கடைகள் தொடங்கி உள்ளன.

Tags

Next Story