விவசாய பணிகள் மும்முரமாக நடப்பதால் கூலி தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு..!

விவசாய பணிகள் மும்முரமாக நடப்பதால்  கூலி தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு..!

தேனி மாவட்டத்தில் கத்தரி தோட்டத்தில் களையெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாய கூலி தொழிலாளர்கள். (இடம்: தேனி அருகே அம்மச்சியாபுரம்)

தேனி மாவட்டத்தில் விவசாய பணிகள் மும்முரமாக நடப்பதால் கூ,லி தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பல்வேறு வகையான விவசாய நிலங்களில் முழு அளவில் விவசாய பணிகள் நடந்து வருகின்றன.

மாவட்டம் முழுவதும் இப்பணிகள் ஒரே நேரத்தில் நடக்கிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப தொழிலாளர்கள் இல்லை. தற்போது கிராம நுாறு நாள் வேலை திட்டப்பணிகள் எங்குமே நடக்கவில்லை. இருப்பினும் தேனி மாவட்ட கிராமங்களில் விவசாய பணிகள் மும்முரமாக நடக்கின்றன. தேவைக்கு ஏற்ப தொழிலாளர்கள் எந்த கிராமத்திலும் இல்லை.

இதனால் கிடைக்கும் தொழிலாளர்களுக்கு தினமும் 500 ரூபாய் வரை கூலி கொடுத்து வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அதுவும் நெல் நடவுப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தினம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கூட வழங்கப்படுகிறது. இவர்கள் மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும்.

தோட்ட வேலைக்கு செல்பவர்கள் காலை 7.30 மணிக்கு பணி தொடங்கும் விவசாயிகள் மதியம் 1.30 மணிக்கு பணிகளை முடித்து விடுகின்றனர். இடையில் அரைமணி நேரம் ஓய்வும், வடை, டீயும் வழங்கப்படுகிறது. பணிகளை முடித்து கரைக்கு வந்ததும் உடனே சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

விவசாய தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால் விவசாயம் செய்பவர்கள் தொழிலாளர்களை தங்களின் தோட்டத்திற்கு வேலைக்கு அழைக்க இது போன்ற புதுப்புது சலுகைகளை வழங்கி வருகின்றனர். மொத்தத்தில் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைத்துள்ளது.

Tags

Next Story