முன் கூட்டியே தொடங்கி விட்டதா கொரோனா 3வது அலை: தமிழக அரசு கலக்கம்

முன் கூட்டியே தொடங்கி விட்டதா கொரோனா 3வது அலை: தமிழக அரசு கலக்கம்
X
கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா என தமிழக அரசு கலக்கமடைந்துள்ளது.

தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட முன்னரே கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதா? என தமிழக அரசு கலக்கமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என தமிழகத்தை சுற்றிலும் உள்ள மாநிலங்களில் கடந்த பத்து நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு சிறப்புக்குழுவை அனுப்பும் அளவுக்கு கேரளாவில் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து, காணப்படுகிறது. அச்சப்படும் அளவிற்கு இந்த மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரிக்காவிட்டாலும், மெல்ல, மெல்ல உயரும் பாதிப்பு எண்ணிக்கை கொரோனா மூன்றாவது அலை உருவாகி விட்டதா? என தமிழக அரசை சந்தேகப்பட வைத்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் தான் பாதிப்பு தெரிய தொடங்கும். செப்டம்பர் பதினைந்தாம் தேதி முதல் அக்டோபர் பதினைந்தாம் தேதி வரை உச்சத்தை எட்டும் என தமிழக அரசு மதிப்பீடு செய்திருந்தது.

ஆனால் இரண்டாவது அலை முற்றாக முடிவுக்கு வரும் முன்னரே பக்கத்து மாநிலங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது மட்டுமின்றி தமிழகத்திலும் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. தடுப்பு பணிகளை வேகப்படுத்தி உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஊரடங்கில் அதிகளவு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால், மீண்டும் கடும் நடவடிக்கைகள் வரலாம் என முதல்வரே எச்சரித்துள்ளார். அந்த அளவு கொரோனா தடுப்பு பணிகளில் அரசு உச்சகட்ட கவனம் செலுத்துகிறது.

இதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் மருத்துவ, சுகாதாரத்துறைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகங்கள் தங்களது டாக்டர்கள், பணியாளர்களை அழைத்து தடுப்பு பணிகள், சிகிச்சை பணிகள், கூடுதல் வசதிகள் செய்வது, வார்டுகளை அதிகரிப்பது, பணிகளை ஒதுக்கீடு செய்வது, மருந்துகளை இருப்பு வைப்பது என பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளன. வரும் வாரத்தில் (தேனி மாவட்டத்தில் திங்கள் கிழமை) சுகாதாரத்துறையும், மருத்துவத்துறையும் இணைந்து அனைத்து தமிழக தனியார் மருத்துவமனை நிர்வாகங்களையும் அழைத்து கொரோனா சிகிச்சை வார்டுகளை அதிகரி்க்கவும் அறிவுறுத்த முடிவு செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு கூட்டத்திற்கு வருமாறு அழைப்புகள் அனுப்பி உள்ளன. பெரும்பாலான மாவட்டங்களில் இந்த தனியார் மருத்துவமனைகளுக்கான ஆலோசனை கூட்டம் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடைபெற உள்ளன.

இதில் பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள், நடுத்தர வயதுடையவர்கள், வயதானவர்கள் என அனைத்து பிரிவினருக்கும், தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்த உள்ளதாகவும், கொரோனா தொற்று குறைந்ததும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை வார்டுகளை மூடி விட்டன. மூடப்பட்ட சிகிச்சை வார்டுகளை மீண்டும் திறக்கவும், முடிந்த அளவு படுக்கைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும் அறிவுறுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!