போடி- சென்னை ரயில்: மக்களுக்கு கிடைத்த நிம்மதி

போடி- சென்னை ரயில்: மக்களுக்கு கிடைத்த நிம்மதி

போடி ரயில் - கோப்புப்படம் 

போடி- சென்னை ரயில், ஆம்னி பஸ்கள் அடிக்கும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை தினங்கள் வந்து விட்டாலே ஆம்னி பேருந்துகளுக்கு மவுசு அதிகமாகி விடும். அதுவும் சாதாரண நாட்களிலேயே ரயிலில் குளிர்சாதன கட்டணம் அளவுக்கு வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள், பண்டிகை காலம் என்று வந்து விட்டால், விமானக் கட்டணம் வசூலிப்பார்கள்.

தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆம்னி பேருந்துகளில் ஒரே மாதிரி கட்டணம் கிடையாது. சூழலுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நேரங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 3500 ரூபாய் வரை சென்று விடுகிறது. இதனால் மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு வந்து செல்ல பல ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டி உள்ளது.

போடியில் இருந்து தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக சென்னைக்கு செல்கிறது. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் பயணிக்க முடியும். இதன் மூலம் தேனி மாவட்ட மக்களுக்கு பெரிய சுமை குறைந்துள்ளது.

ரயில் கட்டணம் சில நுாறு ரூபாய்களில் முடிந்து விடும். வாரத்தில் மூன்று நாள் சென்னையில் இருந்து போடிக்கும், மூன்று நாட்கள் போடியி்ல் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது. அடுத்து மதுரையில் இருந்து சென்னை புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களையும் போடியில் இருந்து தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுவும் சாத்தியமாகி விட்டால், தேனி மாவட்ட மக்கள் ஆம்னி பேருந்துகளின் கொள்ளையில் இருந்து விடுதலை பெற்று விடுவார்கள்.

Tags

Next Story