நினைத்தாலே சிரிப்பு வரும்..மயில்சாமியின் காமெடிகள்..!

நினைத்தாலே சிரிப்பு வரும்..மயில்சாமியின் காமெடிகள்..!

நடிகர் மயில்சாமி விவேக் காமெடி காட்சி(பைல் படம்)

உடல்நலக்குறைவால் காலமான நடிகர் மயில்சாமியின் கவனம் பெற்ற சில திரைப்பட காட்சிகளை இந்த தொகுப்பில் அறியலாம்

எல்.கே.ஜி: எல்.கே.ஜி திரைப்படத்தில் வில்லனுக்கான பில்டப் சீனை பேசும்போது, ”எதிர்த்து நிக்குறது தோனிமா” என மயில்சாமி ஒரு வசனம் பேசி இருப்பார். அந்த காட்சியில் அது மாஸ் ஆகவே இருந்தாலும், நாளடைவில் அது பெரும் மீம் கண்டண்டாகவே மாறி வைரலானது.

தவசி: தவசி திரைப்படத்தில் ஒரே காட்சியில் தோன்றி இருந்தாலும், ஒட்டுமொத்த ரசிகர்களையும் அநாயசமாக கவர்ந்து இருப்பார். போலி மாந்திரீக வாதியாக வந்து, வாயிலேயே நுழையாத படியான பல்வேறு வார்த்தைகளை கூறி, வடிவேலுவிற்கு விபூதி அடித்து பணத்தை சுருட்டும் காட்சிகள் மயில்சாமிக்கே உண்டான நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி இருக்கும்.

தூள்: வடிவேலுவை போன்று விவேக்குடனும் சேர்ந்து பல படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தூள் படத்தில் விவேக்கை ஏமாற்றி பணத்தை பறிக்கும் மயில்சாமி, திருப்பதிக்கு சென்று வருவதாக கூறுவார். அப்போது பார்சலில் லட்டுவிற்கு பதிலாக ஜிலேபி இருக்க, அதை சமாளிப்பதற்காக “பாஸ் திருப்பதியில இப்ப லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுக்குறாங்க என்று கூறி அதகளம் செய்து இருப்பார்.

பாய்ஸ்: பாய்ஸ் திரைப்படத்திலும் பாரில் வரும் ஒரே சீனில் நடித்து ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்கடித்து இருப்பார். நாயகன் மற்றும் அவரது நண்பர்களிடம், டைட்டில் பார்க்கில் வேலை செய்வதாக பொய் கூறி மது வாங்கி குடித்திருப்பார். அதோடு நாங்களே டிராப் செய்யலாமா என அவர்கள் கேட்கும் போது, ”அது அநாவசியம்” என மயில்சாமி கூறும் வசனம் பலரின் தவிர்க்க முடியாத பஞ்ச் ஆக மாறியது.

பாளையத்து அம்மன்: பாளையத்து அம்மன் திரைப்படத்தில் மீண்டும் விவேக்குடன் சேர்ந்து டான்ஸ் சாமியாராக அசத்தினார் மயில்சாமி. அந்த படத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர்கள் இருவரும் விவாதிக்கும் காட்சிகள் பல போலி சாமியார்களின் முகத்தை தோலுரித்து காட்டும் விதமாக அமைந்தது.

உன்னை நினைத்து: சூர்யா நடிப்பில் வெளியான உன்னை நினைத்து திரைப்படத்தில், திருமணமாக உள்ள இளைஞராக நடித்து இருந்தார். அதில் தான் அழகாக வேண்டும் என்பதற்காக தங்க பஸ்பம் லேகியத்தை வாங்கி உண்பதால், அவர் எதிர்கொள்ளும் விளைவுகள் வயிறு குலுங்க சிரிக்கை வைத்து, சிந்திக்கவும் வைத்தது.

என் புருஷன் குழந்தை மாதிரி: என் புருஷன் குழந்தை மாதிரி திரைப்படத்தில் டாக்டர் குயில்சாமியாக தோன்றிய அவர், நோயாளிகளிடம் மாட்டி கொண்டு படாத பாடு பட்டிருப்பார். அந்த காட்சியில் வரும் ”நான் தான் இருக்கேன்ல” வசனம் இன்றளவும் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தலைநகரம்: தலைநகரம் திரைப்படத்தில் புகைப்படக் கலைஞராக வந்த மயில்சாமி, வடிவேலை வைத்து ஃபோட்டோ ஷுட் நடத்தி. ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்திருப்பார். அதில் வரும் ”நீ நடிகன்டா” வசனமும் பல இளைஞர்களின் முக்கிய கவுன்ட்டர் வசனமாகவே மாறியது.

சாணக்யா: சாணக்யா திரைப்படத்தில் மீண்டும் வடிவேலுவுடன் கைகோர்த்து, ஒரு காமெடி காட்சியில் நடித்து இருந்தார். அதில், பள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒரு ஆட்டோவை பிளான் போட்டு மீட்டெடுக்கும் காட்சி வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. இப்படி பல ஆண்டுகள் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த மயில்சாமி அண்மையில் இந்த உலகத்தைவிட்டு பிரிந்து இறைவன் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

Tags

Next Story