தேனி மாவட்டத்தில் வெயில் உக்கிரம்! அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு சரிவு

தேனி மாவட்டத்தில் வெயில் உக்கிரம்! அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு சரிவு

முல்லைப்பெரியாறு  அணை.

தேனி மாவட்டத்தில் மூன்று மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணை ஆகிய அணைகள் பாசனம் மற்றும் குடிநீருக்காக பயன்பட்டு வருகின்றன. இவை மட்டுமின்றி ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தூவானம் அணை, ஹைவேவிஸ் அணை, இரவங்கலாறு அணை, மணலாறு அணை போன்ற அணைகளும் உள்ளன

தேனி மாவட்டத்தில் வெயிலின் உக்கிரம் இப்போதே மிகவும் அதிகமாக உள்ளது. காற்றில் ஈரப்பதம் குறைந்து வறண்ட காற்று வீசுகிறது. இதனால் பெரும் அளவில் வெயிலின் தாக்கம் உள்ளது. இந்த நிலையில் மூன்று மாதங்களாக மழை இல்லாததல் நீர் வரத்து இன்றி அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகின்றன.

முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 118.25 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 105 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து இல்லை.

வைகை அணை நீர் மட்டம் 64.57 அடியாக குறைந்துள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 39 கனஅடியாக குறைந்து விட்டது. மதுரை, ஆண்டிபட்டி சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக அணையில் இருந்து விநாடிக்கு 79 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 40.50 அடியாக குறைந்து விட்டது. சோத்துப்பாறை நீர் மட்டம் 110.50 அடியாக உள்ளது. சண்முகாநதி நீர் மட்டம் 26.40 அடியாக குறைந்து விட்டது. மூன்று அணைகளுக்கும் நீர் வரத்தும் இல்லை. வெளியேற்றமும் இல்லை.

Tags

Next Story