ஒரே மாதத்தில் 60 பேரை கடித்த நாய்; நகராட்சி சுகாதாரத்துறை கைவிரிப்பு

ஒரே மாதத்தில் 60 பேரை கடித்த நாய்;  நகராட்சி சுகாதாரத்துறை கைவிரிப்பு

பைல் படம்.

தேனியில் அல்லிநகரம் பகுதியில் மட்டும் ஒரே மாதத்தில் 60 பேர் நாய்க்கடியில் சிக்கி உள்ளனர்.

தேனியும், நாய்த்தொல்லையும் என்று ஒரு கட்டுரையே எழுதலாம். அந்த அளவுக்கு தேனியில் மிகவும் கடுமையான நாய் தொல்லை இருந்து வருகிறது. கடந்த 30 நாளில் மட்டும் தேனி கான்வென்ட் பள்ளி வளாகத்தில் இருந்து அல்லிநகரம் வரை அதாவது ஒரு கி.மீ., துாரம் கொண்ட மிக சிறிய எல்லைக்குள் 60 பேரை நாய் கடித்துள்ளது. கடிபட்டவர்கள் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டு வருகின்றனர்.

தேனி நகரில் எந்த தெருவில் பார்த்தாலும் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிவதை காணலாம். சில நாய்கள் நோய் தொற்றுடன் வலம் வந்து மக்களை மிரள வைக்கிறது. இந்த தொல்லைக்கு தீர்வு தான் என்ன என தேனி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம்.

அப்போது, விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, நாய்களை கொல்வது சிறை தண்டனைக்குரிய பெருங்குற்றம். தேவைப்பட்டால் நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் எண்ணிக்கையினை குறைக்க முயற்சிக்கலாம்.

நாய்களை கொல்வதும், பிடித்துச் சென்று வெளியில் விட்டு வருவதும் இயலாத காரியம். நாங்கள் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். மக்கள் கவனமுடன் இருப்பதை தவிர தற்போதைக்கு உடனடி தீர்வு வேறு எதுவும் இல்லை எனக்கூறி கை விரித்தனர்.

Tags

Next Story