வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த பக்தர்

வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி  எடுத்த பக்தர்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிச்சட்டிகளை எடு்த்து வந்த பக்தர்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழாவில் பக்தர் ஒருவர் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினார்.

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழா வீரபாண்டி கவுமாரியம்மன் கோயி்ல் விழா ஆகும். இந்த விழா சித்திரை மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி, வைகாசி மாதம் முதல்வாரம் வரை நடைபெறும். இதற்காக சித்திரை மாதம் முதல்தேதியில் இருந்து மாவட்டம் முழுவதும் பக்தர்கள் விரதம் தொடங்கி விடுவார்கள். தேனி மட்டுமின்றி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் என பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஒரு வாரம் வரை நடைபெறும்.

இந்த திருவிழா திடலை ஒருமுறை சுற்றி வந்தவர்கள் பக்தர்களின் பக்தியையும், நம் கலாச்சார பெருமையினையும் கண்டு அசந்து விடுவார்கள். இந்த ஒரு வாரமும் இடைவிடாமல் அன்னதானம் நடக்கும். கிடா வெட்டுதல், சேவல் அறுத்தல், சர்க்கரை பொங்கல் வைத்தல், வெண் பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், சேத்தாண்டி வேடம் அணிதல், முக்கொம்புக்கு தண்ணீர் ஊற்றுதல், விளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சணம் செய்தல், அக்னிசட்டி எடுத்தல் என பலநுாறு வகையான நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள்.

சிலர் பக்தியின் தீவிரம் காரணமாக அலகு குத்தி தேர் இழுத்தல், அழகு குத்தி அக்னிசட்டி எடுத்தல், பறவை காவடி எடுத்தல், ஒரே நேரத்தில் பல அக்னிசட்டிகளை எடுத்தல் என நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இன்று காலை தேனி தங்கமலையான் குரூப்பினை சேர்ந்த வக்கீல் விஜய், கோட்டைச்சாமி ஆகியோரின் சகோதரர் விஜயன் என்பவர் 61 அக்னிசட்டிகளை ஒரே நேரத்தில் எடுத்துச் சென்று கோயிலி்ல் செலுத்தினார்.

வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் நடந்த இந்த விழாவில் விஜயனுக்கு வக்கீல் ஜெயக்குமார் மாலை அணிவித்து பூச்சட்டிகளை (அக்னிசட்டிகளை) ஏந்தி வந்த அவரை வரவேற்றார். இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் உட்பட நுாற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வீரபாண்டியில் உலா வந்த அக்னிசட்டி ஊர்வலம் கோயிலில் கவுமாரியம்மன் சன்னதியில் நிறைவடைந்தது.

Tags

Next Story