சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
![சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி](https://www.nativenews.in/h-upload/2023/03/26/1687348--.webp)
டி.ஜி.பி., சைலேந்திர பாபுவிடம் பாராட்டு சான்று வாங்கும் போலீசார் மற்றும் அதிகாரிகள்.
தேனி பூதிப்புரத்தை சேர்ந்தவர் சோனிராஜா, 55. இவர் தற்போது அல்லிநகரம் குறிஞ்சி நகரில் வசித்து வருகிறார். இவர் 14 வயதில் தனது திருட்டு தொழிலை ராமேஷ்வரத்தில் இருந்து தொடங்கினார். அங்கு ஒரு வெளிநாட்டு பயணிகளிடம் சூட்கேஸை திருடியது தான் முதல் திருட்டு. அதன் பின்னர் திருட்டே வாழ்க்கையாகிப்போனது. மணவாழ்க்கை தொடங்கினாலும், திருட்டு வாழ்க்கை முடிவுக்கு வரவில்லை. இவர் அவ்வப்போது போலீசில் சிக்கினாலும், திருடிய நகை, பணத்தை ஒப்படைப்பதில்லை. திருடவில்லை என்றே சாதிப்பது வழக்கம். இதனால் சோனிராஜை எதுவும் செய்ய முடியாமல் போலீசார் தவித்தனர். தற்போதய நிலையில் இவர் மீது வீட்டின் கதவை உடைத்து திருடியதாக மட்டும் 65 வழக்குகள் உள்ளன. இதர வழக்குகள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. இதுவரை திருடிய சொத்து மதிப்பு பல பல லட்சங்களை தாண்டும்.
நாற்பத்தி ஓராண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த திருடனை பிடித்து, டி.ஜி.பி.,யிடம் பாராட்டு சான்று வாங்கிய தேனி போலீஸ் குழு.
இந்த நபர் தான் தேனி பழனிசெட்டிபட்டி அரசு நகரில் 24 பவுன் நகை மற்றும் பணத்தை திருடியுள்ளார். திருடிய பின்னர் போடி ரோட்டில் வந்து ரோட்டோரம் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தார். திருடும் போது பேண்ட் சட்டை போட்டு திருடியுள்ளார். போடி ரோட்டுக்கு வந்து உடைகளை மாற்றிக் கொண்டார். சாதாரண விவசாயி போல கைலி அணிந்து கொண்டார். திருடிய இரண்டு மணி நேரம் கழித்து நள்ளிரவி்ல், தனது டூ வீலரில் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் வந்ததும், தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் ரோங்கரே, இன்ஸ்பெக்டர் ராஜேஸ், சிறப்பு எஸ்.ஐ., கர்ணன் மற்றும் நாகராஜ், செல்வம், கணேசன், விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்தார். இவர்கள் விசாரணை நடத்தினர். இதில் சிறப்பு எஸ்.ஐ., கர்ணன் தேனி, பழனிசெட்டி, அல்லிநகரம், பொம்மைகவுண்டன்பட்டி, ரத்தினம் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியில் முன்பு ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
பல இடங்களில் கண்காணிப்பு கேமரா உள்ளதை கண்டறியவே முடியாது. அந்த அளவு நவீன நுட்பங்களை பயன்படுத்தி தேனியில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர். இந்த விஷயம் தான் போலீசாருக்கு கை கொடுத்தது. கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், திருடிய குற்றவாளி சோனிராஜா தான் என்பதை உறுதி செய்து, குற்றம் நடந்த இரண்டாவது நாள் இரவில் அவரை கைது செய்து, திருடப்பட்ட பொருட்களையும் மீட்டு விட்டனர். அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தான், செய்தியின் முதல் பாராவில் படித்த விஷயங்கள் வெளிவந்தன. தற்போது இவர் மீது உள்ள அத்தனை வழக்குகளும் துாசி தட்டப்பட்டு, தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் விசாரணைக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த கடும் குற்றவாளியை கைது செய்த போலீஸ் படையினரை திண்டுக்கல் வந்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி.அஸ்ராகார்க், திண்டுக்கல் டி.ஐ.ஜி., அபினவ்குமார், திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரன், தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu