திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற ஆள்மாறாட்டம் செய்த இருவர் கைது

திருவிடைமருதூர் நீதிமன்றத்தில்  ஜாமீன் பெற ஆள்மாறாட்டம் செய்த இருவர் கைது

திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் கொலைவழக்கில் தொடர்புடையவரை ஜாமீனில் எடுப்பதற்காக ஆள்மாறாட்டம் செய்தாதல் கைது செய்யப்பட்டவர்கள்

கும்பகோணம் அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை ஜாமீனில் எடுக்க ஆள்மாறாட்டம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்

கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை, ஜாமீன் பெற ஆள்மாறாட்டம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் மகன்கள் கூலித் தொழிலாளிகளான அருண்குமார் (28), அரவிந்த் (25), இவர்கள் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24 -ம் தேதி முன்விரோதத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சோழபுரம் காரல்மார்க்ஸ்(30), அவரது நண்பர்கள் ராஜேஷ், நரேஷ், சதீஷ், பிறையரசன், விக்னேஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

முன்விரோதத்தால் நிகழ்ந்த இந்த இரட்டை கொலை தொடர்பாக திருப்பனந்தாள் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கு திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த வழக்கு, திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் ஜாமீனில் வெளியே எடுக்க, குமரங்குடியை சேர்ந்த நாகப்பன் மகன் காசிராமன்(53) மற்றும் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் பாலு(53) ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

அப்போது, நீதிமன்றத்தில் தான் குற்றவாளிகளுக்கு ரத்த உறவு என்று கூறி ஆவணங்களை சம்ரப்பித்தனர். இருவரையும் விசாரணை செய்த நீதிபதி அவர்கள் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தபோது இருவரும் போலியாக ஆவணங்களை வழங்கியதும், ஆள்மாற்றாட்டம் செய்தது தெரியவந்தது.இதனையடுத்து திருவிடைமருதூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, காசிராமன் மற்றும் பாலு இருவர் மீதும் வழக்கு பதிந்து, சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து திருவிடைமருதுார் போலீஸார், காசிராமன், பாலு மீது ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல், நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்தல் ஆகிய பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story