திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் காவல்நிலையத்தில் ஆய்வு செய்தபோது மரக்கன்று நடவு செய்த எஸ்பி ரவளிப்பிரியா.
திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், காவல்துறை ஆய்வாளர் ஓம்பிரகாஷ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் மூலம் கஞ்சா சப்ளை செய்வதாக கூறப்படுவது தொடர்பாக இதுவரை புகார் எதுவும் இல்லை. அது குறித்து விசாரிக்கப்படும். கஞ்சா விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாவது தடுக்கப்பட வேண்டும்.
பந்தநல்லுார் அருகே வேட்டமங்கலம் மற்றும் காமாட்சிபுரம் பகுதிகளில் ஆட்டோ டிரைவர் பிரபாகரன் கொலையை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம், சமுதாய மோதல் எனச் சொல்ல முடியாது. அந்த வழக்கில் உரிய விசாரணை நடக்கிறது. அதே போல் திருவைகாவூரில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக வரும் வாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அங்கும் இயல்பு நிலை திரும்ப மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பந்தநல்லுார், நாச்சியார்கோவில் காவல் நிலையங்களில் பழைய கட்டடங்களை இடிக்க அனுமதி கேட்டுள்ளோம். புதிய கட்டடம் கட்ட இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. புதிதாக தொடங்கப்பட்டுள்ள சோழபுரம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கேட்டுள்ளோம். காவல் நிலையங்களில் காலி பணியிடங்கள் இல்லாத வகையில் பணியிடம் நிரப்பப்படுகிறது. கும்பகோணத்தில் நடந்த இளைஞர் கொலை சம்பவத்தில் விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என்றார் எஸ்பி ரவளிப்பிரியா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu