மேலதிகாரி கொலை: பைத்தியமாக நாடகமாடிய ஊழியர் கைது

மனநோயாளி போல் நடித்த அன்பு.
கடந்த 24-தேதி தனியார் இயற்கை விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் நிறுவன மண்டல மேலாளர் வெங்கடேசன் என்பவர் கும்பகோணத்திற்கு மீட்டிங்கிற்காக வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கும்பகோணம் அருகே மனஞ்சேரி காவிரி ஆற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆற்றில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து வெங்கடேஸ்வரன் கடைசியாக இருந்த சக ஊழியர் ஆடுதுறை மருத்துவ குடியைச் சேர்ந்த அன்பு என்பவரை போலீசார் தேடி சென்ற போது அவருக்கு மனநிலை சரியில்லை என தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அங்கு இருந்த மனநல மருத்துவரிடம், அன்புக் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை பரிசோதனை செய்து தெரிவிக்குமாறு கூறியிருந்தனர். அதற்கு ஒரு சில நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து இரண்டு போலீசாரை மாறுவேடத்தில் அன்புவின் செயல்பாடுகளை மருத்துவமனையில் கண்காணிக்கும்படி கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் இரண்டு போலீசார் கடந்த மூன்று நாட்களாக பகலிரவு பாராமல் அன்புவின் செயல்பாடுகளை கண்காணித்தனர். அப்போது ஆட்கள் நடமாட்டம் உள்ள போது அன்பு கை,கால்களை அசைத்தபடி நான் ஒரு பைத்தியம், நான் ஒரு பைத்தியம் என புலம்பியபடியும், ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது சகஜமாக எப்பவும் போல் தனது மனைவியிடம் பேசியுள்ளார்.
இதையடுத்து அவர் பைத்தியம் போல் நடிப்பதே போலீசார் தெரிந்து கொண்டனர். மேலும் அன்புவை பரிசோதனை செய்த தஞ்சை மருத்துவ கல்லூரி மனநல மருத்துவர்களும் அவர் பைத்தியம் இல்லை என உறுதியாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அன்புவை கும்பகோணம் அழைத்து வந்த போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவத்தன்று மதுபோதையில் ஏற்பட்ட வாய் தகராறில் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் அருகிலிருந்த கூர்மையான தகடால் வெங்கடேசனின் கழுத்தை அறுத்ததாகவும், போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக பைத்தியமாக நடித்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu