Thanjavur News Today தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

Thanjavur News Today தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்
X

தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தின் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகள் பற்றிய தொகுப்பு

தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம்

உலக சுற்றுலா தின விழாவின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பயிற்சியினை தேசிய விருது பெற்ற தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் சம்பாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குழுவினர் 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இதில் மரப்பலகை, பருத்தித் துணி, புளியங்கொட்டை பசை கொண்டு பலகை தயாரிக்கும் பணி குறித்தும், தேவையான வரைபடத்தை உருவாக்குதல் எப்படி என்பது குறித்தும், தொடர்ந்து வண்ண கற்கள் பதித்து மாவு வேலைப்பாடு செய்வது குறித்தும், தங்க இதழ் பதித்தல் குறித்தும், நிறைவாக வண்ணம் தீட்டி ஓவியத்தை நிறைவு செய்தல் குறித்தும் படிப்படியாக செய்து காண்பித்தனர்.

இதில் பங்கேற்றவர்கள் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் தொடர்ந்து இது போன்ற பயிற்சி முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக இப்பயிற்சியினை இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் பத்மாவதி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கணக்கு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்

தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக தஞ்சாவூர் அரசு போக்குவரத்து நகர்1 கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கும்பகோணம் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யூ மத்திய சங்கப் பொருளாளர் ராமசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், ஐ.என்டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏஐடியூசி பொதுச் செயலாளர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.


நெற்பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்

தஞ்சை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகாவிடம் இருந்து உரிய காவிரி நீர் பெற்றுதரக்கோரி விவசாய சங்க நிர்வாகி கக்கரை சுகுமாறன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு நெற்பயிர்களுக்கு தேங்காய், காய்கறிகள், பழம் உள்ளிட்டவற்றால் படையலிட்டு திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக விவசாயி ஒருவர் மந்திரங்கள் ஓதி திதி கொடுத்தார்.

அப்போது காவிரி நீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சைகை மொழி தினம் காது கேளாதோர் விழிப்புணர்வு பேரணி

ஒரத்தநாட்டில் சர்வதேச காது கேளாதோர் தின சைகை மொழிக்கான சர்வதேச நாள் பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து தொட ங்கிய பேரணியை ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

சர்வதேச காது கேளாதோர் உரிமைகள் பிரகடனம் குறித்து ஒரத்தநாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் அமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சாரதா, வாய் பேசாத குழந்தைகளிடம் கருத்துரை வழங்கினார்.

இந்தப் பேரணியில் காது கேளாத குழந்தைகளின் சைகை மொழி வழிநடத்தலை ராகவி, வழங்கினார். பேரணியை காது கேளாதோர் அமைப்பின் தலைவர் விவேக், செயலாளர் சிவாஜி உள்ளிட்ட பலர் முன்னின்று நடத்தினர்.


பூதலூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம்: 200 பேர் கைது

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க மறுத்ததால் இந்த ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெருமளவில் குறுவை பயிர்கள் காய்ந்து கருகி விட்டன. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், தண்ணீரின்றி வாடி சேதமான பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் பொருளாளர் மணிமொழியன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன் உள்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் ரயில் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் காவிரி நீர் வழங்காத கர்நாடகா, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் விவசாயிகள் திரண்டு ரயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். தண்டவாளத்தில் கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் விரைவு ரயிலை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் ரயில் மீது ஏறி நின்றும், தண்டவாளத்தில் படுத்து கிடந்தும் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர். இதனை தொடர்ந்து 30 நிமிடம் தாமதமாக சோழன் விரைவு ரயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தால் பூதலூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story