பட்டுக்கோட்டையில் வீடு, வீடாக சென்று புத்தகங்களை வழங்கும் இளைஞர்
பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் வீடு, வீடாக சென்று சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் படிக்க புத்தகம் வழங்கி வருகிறார்.
HIGHLIGHTS
ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் இளைஞர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும், சிறுவர்கள், இளைஞர்கள் கொரோனா தடை காலத்தை பயன் உள்ளதாக மாற்றும் முயற்சியில் வீடு வீடாகச் சென்று இலவசமாக புத்தகங்களை வழங்கி நடமாடும் நூலகமாக செயல்படும் இளைஞர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் செல்போன் கடை வைத்துள்ளார். மேலும் புத்த பிரியரான சதீஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி தனது வீட்டு மாடியில் "ஹோம் லைப்ரரி" என்கிற பெயரில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அரசு ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் செல்போன்களின் விளையாட்களில், மூழ்கி காலத்தை விரயம் செய்து, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்ட சதீஷ் சிறுவர்கள், இளைஞர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக யாரும் நூலகம் வர முடியாது என்பதால், அவர் வீட்டு நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கிராம பகுதிகளை சேர்ந்த, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகத்தை கொடுத்து அதில் உள்ள விவரங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கி அவர்களிடத்தில் புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொல்கிறார்.
மேலும் பெரியவர்களிடத்தில் சிறுவர்களையும் இளைஞர்களையும் செல்போன் பார்க்க அனுமதிக்க வேண்டாமென அறிவுறுத்தி வருகிறார். இவர் வீடு வீடாக சென்று புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக கொடுத்து சேவை செய்து வருவதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.