சிலம்ப மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிலம்ப மாணவர்களுக்கு பாராட்டு விழா
X
கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், தஞ்சை மாவட்ட சிலம்ப பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 26 பதக்கங்களை வென்றனர். கிராம மக்கள் சார்பாக இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி கடந்த பிப்ரவரி 5.6.7. ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. போட்டியில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 1013 சிலம்பாட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுநகர் பாரம்பரிய பள்ளியை சேர்ந்த 13 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த சிலம்பப் போட்டியில் தங்கம்,வெள்ளி, வெண்கலம் உட்பட மொத்தம் 26 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் கேரளாவில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் புதுநகர் பாரம்பரியம் பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் சிலம்பப் போட்டியில் 26 பதக்கங்களைப் பெற்றுத்தந்து தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு கிராம மக்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் திருவோணம் ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகளை வழங்கினார். முன்னதாக சிறுவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிலம்பக் கலைக்கு வணக்கம் செலுத்தி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் சிலம்பம் சுற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story