மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் உயிரிழப்பு என உறவினர்கள் குற்றாச்சாட்டு

மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் உயிரிழப்பு என உறவினர்கள் குற்றாச்சாட்டு

லெட்சுமி சிகிச்சை பலனின்றி கடந்த 22ஆம் தேதி அவர் உயிரிழந்தார்

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை கட்டைவிரல் துண்டிப்பு பாதுகாப்பை மீறி குழந்தை கடத்தல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது

நடிகை ஜோதிகா கூறியது போல், அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவனை.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே இளங்கார்குடியை சேர்ந்தவர் விஜயகுமார் (39). இவர் திருப்பூரில் தனியார் கார்மென்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமாருக்கும் அருகில் உள்ள நெடுந்துறை பகுதியை சேர்ந்த லெட்சுமி என்பவருக்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு பாபநாசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறை கர்ப்பமான லெட்சுமி, கடந்த 29 -ஆம் தேதி பிரசவத்திற்காக தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அன்று இரவே லெட்சுமிக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், லெட்சுமிக்கு மஞ்சள் காமாலை இருப்பதால், உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 17 நாட்கள் லெட்சுமி தஞ்சை இராசாமிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி அவரது உறவினர்கள் லெட்சுமியை வீட்டிற்கு கடந்த 17ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர்.

லெட்சுமி வீட்டிற்கு வந்த மறுநாளே, அதாவது 18ஆம் தேதி DMCHO ஜாக்குலின் உத்தரவின் பேரில், வீரமாங்குடி செவிலியர் திலகவதி மற்றும் பண்டாரவடை செவிலியர் புவனேஸ்வரி இருவரும் ஆம்புலன்ஸ் வேனுடன், லெட்சுமியின் வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் வந்து சேருமாறு கூறியுள்ளனர். அப்போது லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் மறுக்கவே, காலை 10 மணிக்கு வந்த செவிலியர்கள் இரவு 11 மணி வரை அவர்களுடன் பேசி இரவு 11 மணிக்கு மேல், உங்கள் மனைவிக்கு எதுவும் ஆகாது. அதற்கு நாங்கள் பொறுப்பு என கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு அவர்களை அழைத்து சென்றுள்ளனர். அழைத்து செல்லப்பட்ட லெட்சுமி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், லெட்சுமி சிகிச்சை பலனின்றி கடந்த 22ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த லெட்சுமியின் உடலைப் பெறுவதற்கு முன்பு கல்லூரி முதல்வர் ரவிக்குமார் வலுக்கட்டாயமாக லட்சுமியின் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை,மேலும் நீதிமன்றம் செல்லமாட்டோம் என எழுதி வாங்கி கொண்ட பிறகுதான் உடலை ஒப்படைத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஏன் வலுகட்டாயமாக எழுதி வாங்கினார்கள் என உறவினர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுந்ததால், லட்சுமியின் மருத்துவ அறிக்கைகளை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் காண்பித்துள்ளனர். அப்போது அதனை பார்த்த தனியார் மருத்தவமனை மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ ஊசி போல் பொருட்களை வைத்து தையல் போடப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லெட்சுமியின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.

மேலும் தங்களிடம் உள்ள ஆவனங்கள் அனைத்தையும் தரும்படி அரசு மருத்துவமனை மருத்தவர்கள் கேட்பதாக கூறுகின்றனர். எனவே லெட்சுமியின் இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்திற்கு நஷ்டஈடு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலரிடம் உறவினர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சை அரசு மிராசுதார் மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், இதனால் பெரிய கோயிலை கூட தான் சுற்றி பார்க்காமல் வந்து விட்டதாகவும், கோயிலுக்கு வழங்கப்படும். தொகையை, மருத்துவமனைக்கு கொடுத்து முறையாக பராமரிக்க வேண்டும் என நடிகை ஜோதிகா பேசியது, மிகப்பெரிய சர்ச்சையாக அப்போது பேசப்பட்டது. நடிகை ஜோதிகா பேசியது போல், தஞ்சை அரசு மிராசுதார் மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு. பாதுகாப்பை மீறி குழந்தை கடத்தல், உரிய பராமரிப்பு இல்லை என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

Tags

Next Story