பாபநாசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
பாபநாசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆட்டோ டிரைவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சி மாலாபுரம் கிராமம் மேலத்தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம் (வயது 65) விவசாயி. இவருடைய மகன் விஜயன் (வயது 32) ஆட்டோ டிரைவர். திருமணமாகாதவர். இவர் பாபநாசம் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தவர். மேலும் பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனிலும், ரயிலிலிருந்து வருகின்ற பயணிகளையும் அழைத்து செல்வார். இந்நிலையில் பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தை ஆட்டோ டிரைவர் விஜயன் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது நாகர்கோவிலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து விஜயன் தந்தை ராமலிங்கம் கும்பகோணம் ரயில்வே போலீசுக்கு புகார் கொடுத்தார். கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவ வடிவேலு, சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆட்டோ டிரைவர் விஜயன் இறந்துவிட்டதால் பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் இயங்கவில்லை. இறந்த ஆட்டோ டிரைவர் விஜயனுக்கு மலர் அஞ்சலி செலுத்திய அனைத்து ஆட்டோ டிரைவர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.