பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் காணாமல் போனதாக கருதப்பட்ட ஐம்பொன்சிலை மீட்பு

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் காணாமல் போனதாக கருதப்பட்ட ஐம்பொன்சிலை மீட்பு
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் காணாமல் போனதாக கருதப்பட்ட ஐம்பொன்சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தகவல்

பசுபதீஸ்வரர் கோயிலில் காணாமல் போனதாக கருதப்பட்ட சண்டிகேஸ்வரர் ஐம்பொன் சிலை, கீழமனக்குடி கோயில் சிலையாக கணக்கில் இருந்து, பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோயில் பாதுகாப்பு அறையில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் கண்டுபிடித்தனர்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த, கீழ்மனக்குடி விஸ்வநாதசுவாமி மற்றும் ரங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலின் 6 உற்சவர் ஐம்பொன் சிலைகள் திருடுபோனதாகவும், திருடு போன சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் அளிக்காமல் மறைத்து விட்டதாகவும், பந்தநல்லூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் அளித்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 2017-ம் ஆண்டு 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது, கீழ்மனக்குடி விஸ்வநாதசுவாமி மற்றும் ரங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயில்களில் திருட்டு போன சிலைகளின் புகைப்படங்களை வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்படி பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஒரு பழமையான சண்டிகேஸ்வர் உலோக சிலையும் காணாமல் போனது தெரியவந்தது.

இந்நிலையில் பசுபதீஸ்வரர் கோயிலில் காணாமல் போனதாக கருதப்பட்ட சண்டிகேஸ்வரர் ஐம்பொன் சிலை, கீழமனக்குடி கோயில் சிலையாக கணக்கில் இருந்து, பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோயில் பாதுகாப்பு அறையில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை அடிப்படையில் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் ஜெய்ந்த்முரளி உத்தரவின் பேரில், கூடுதல் கண்காணிப்பாளர்கள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோர் இந்த சிலையை, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story