மகாமகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இன்று மாசி மகத்தை ஒட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகத்துடன் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருவிழா கடந்த பிப்.17-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இதேபோல, சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய பெருமாள் கோயில்களில் கடந்த பிப்.18-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கடந்த 17-ஆம் தேதி முதல் மாசிமக தொடர்புடைய அனைத்து ஆலயங்களிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இன்று மாசிமக தினத்தை ஒட்டி மகாமகக் குளக்கரையில் பல்வேறு சிவாலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். அப்பொழுது மகாமக குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு கொரொனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் குளத்துக்குள் இறங்க அனுமதி அளிக்கப்படவில்லை மக்கள் மகாமக குளக்கரையின் நான்கு கரைகளிலும் நின்றவாறு தீர்த்தவாரி நிகழ்ச்சியை கண்டு வழிபட்டனர் .
மேலும் இந்த ஆண்டு மகாமக குளக்கரையில் ஆண்டு தோறும் முன்னோர்களுக்கு நடத்தப்படும் வழிபாடு நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, மாற்றாக மகாமகம் குளம் எதிரே உள்ள இந்திரா காந்தி சாலையில் தர்ப்பணம் கொடுக்க மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குளக்கரையில் நவீன கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருந்தன. ஒலிப்பெருக்கி மூலம் தகவல்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாசி மகத் தீர்த்தவாரிக்காக மகாமக குளத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் நிரப்பட்டிருந்தது. கும்பகோணம் முழுவதும் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மகாமக குளத்திற்குள் ராட்சஸ பலூன் போன்ற படகில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படைதுறையினர் வட்ட மடித்து கொண்டே இருந்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu